கொரோனா வைரஸ் சிகிச்சை காரணமாக தனிநபர்கள் அல்லது நிறுவனத்திடமிருந்து பெரும் பணத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த ஆண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் பணவரவுக்கு வருமான வரி கணக்கில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் மனநிம்மதி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது விரிவாக பார்ப்போம்.
கொரோனா பாதிப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் பலர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணத்தைப் பெற்று பலர் சிகிச்சை பெற்றனர்
வரி விலக்கு
மேலும் கொரோனா தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர் பணி செய்த நிறுவனம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் நிதி உதவி அளித்தனர். இவ்வாறு நிதி உதவி மற்றும் கொரோனா சிகிச்சைக்காக பெற்ற பணங்கள் வருமானவரி கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது
படிவம்
இந்த நிலையில் 2021-22 நிதி ஆண்டிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக பெறும் அனைத்து தொகைக்கும் விலக்கு அளிக்கப்பட உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின் சிகிச்சை செலவுகளுக்கான படிவமும் வெளியாகியுள்ளது.
என்னென்ன ஆவணங்கள்?
இந்த படிவத்தில் என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்
1. கொரோனா பாசிட்டிவ் என்ற மருத்துவ ரிப்போர்ட் பெற்று அதனை சமர்ப்பிக்க வேண்டும்
2. கொரோனா சிகிச்சைக்கு செலவாகியுள்ள மொத்த பணத்திற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
3. உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த தொகை, யாரிடமிருந்து பணம் பெறப்பட்டதோ, அந்த நபர் அல்லது நபர்களின் பெயர், முகவரி, பான் எண் மற்றும் எந்த நிதியாண்டில் தொகை பெறப்பட்டது என்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
4. கொரோனா தொற்றினால் இறந்த ஒருவரின் குடும்ப உறுப்பினர்களால் பெறப்படும் நிதியுதவிகள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்
5. இதோடு மருத்துவப் பயிற்சியாளர் அல்லது அரசு சிவில் பதிவு அலுவலகத்தால் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கை அல்லது இறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்