டெல்லி: இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளாக சமூக வலைதளங்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மதம் சார்ந்த பதிவுகள், வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகள், ஆபாச பதிவுகள், பொய் செய்திகள் என பலவும் வரம்பு மீறி பரப்பட்டு வருகின்றன.
சமூக வலைதள நிறுவனங்களும் இதனை கட்டுப்படுத்தும் விதமாக பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எனினும் இதுவரையில் இப்பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. அரசும் இது குறித்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு, கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
மத்திய அரசின் கட்டுப்பாடு
இது குறித்து கடந்த ஆண்டே மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. அரசின் அறிக்கையின் படி சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் குறித்து வரும் புகார்களை தனியாக விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் நிறுவனங்கள் அதிகாரிகளை நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
தனி குழு
ஆனால் அரசின் அறிவிப்புகளுக்கு ஏற்ப கட்டுபாடுகளும் இல்லை. புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற புகார் மீண்டும் எழுந்தது. இதற்கிடையில் தான் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஒரு ஒழுங்குமுறை குழு அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
ட்விட்டர் பேஸ்புக் ஒப்புதல்
இதற்கு ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன. ஆனால் கூகுள் நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கிடையில் தான் தற்போது 3 மாதங்களுக்குள் சமூக வலைதளங்கள் மீதான புகார்களை விசாரிக்க மேல்முறையீட்டு குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
15- நாட்களுக்குள் நடவடிக்கை
இதற்காக ஐடி விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தின் படி, ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டாக வேண்டும். ஒரு பயனாளர் புகார் அளித்தால் அதனை 24 மணி நேரத்திற்குள் பெற வேண்டும். அந்த புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய பாதுகாப்பு
இதன் மூலம் இணையத்தில் பாதுகாப்பினை அதிகரிக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது. ஆக இதன் பிறகு பொய்யான செய்திகள், வன்முறையை தூண்டும் பதிவுகள், ஆபாச பதிவுகள் போன்ற முகம் சுழிக்க வைக்கும் பதிவுகள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இனி சமூக வலைதள நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அரசாங்கம் விரும்புகின்றது.
உரிமைகளுக்கு செவி சாய்க்கணும்
இடைதரகர்கள் விதிமுறைகளை பயனர்களுக்கு கூறுவதாக மட்டுமே இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்காது. அவர்கள் எந்தவித சட்டவிரோதமான பதிவும் வெளியிடப்படாமல் இருக்க வேண்டும். மிகப்பெரிய டெக் நிறுவனங்களின் தலைமையிடம் அமெரிக்கா, ஐரோப்பா என எதுவாக இருந்தாலும், அவர்கள் இந்தியாவில் செயல்படும் போது, இந்தியர்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு செவி சாய்க்க வேண்டும், அரசுக்கு முரணாக இருக்க கூடாது.
72 மணி நேரத்திற்குள் அகற்றனும்
தற்போது சமூக வலைதள நிறுவனங்கள் பொய்யான தகவல்கள், சட்ட விரோதமான பதிவுகள், வன்முறையை உருவாக்கும் நோக்கத்துடன் போடப்பட்ட பதிவுகள் என எந்த விதமான பகைமையை தூண்டும் பதிவாக இருந்தாலும், அவற்றை 72 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. இந்த 72 மணி நேரம் என்பது மிக அதிகமான நேரமாக தோன்றலாம்.
உடனடியாக நீக்கணும்
எனினும் மோசமான வன்முறையை தூண்டும் ஒரு பதிவாக இருப்பின் அதனை உடனடியாக நீக்கவும் வேண்டும் என அரசு வாதிட்டது. எந்தவொரு நிறுவனத்தையும், இடைதரகரையும் நாங்கள் குறி வைக்கவில்லை. ஆனால் இணைய பாதுகாப்பினை மேம்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறது என அரசு தரப்பு கூறுகின்றது.
சமூக ஆர்வலர்களின் கருத்து என்ன?
உண்மையில் இது ஆரம்பத்தில் கஷ்டமானதாக தோன்றினாலும் வரவிருக்கும் பிரச்சனைகளை இதன் மூலம் தீர்க்க முடியும் எனலாம். ஆக கட்டாயம் இதுபோன விதிமுறைகள் அவசியம். அதற்கு இணங்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
உண்மையில் இது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று தான்.. பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே முடிவுக்கு கொண்டு வர இது பயனுள்ளதாக அமையும்.


Click it and Unblock the Notifications