இந்திய ஊழியர்களை ஒரு புறம் இந்த கொரோனா வாட்டி வதைக்கிறது எனில், மறுபுறம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்தடுத்து ஐடி ஊழியர்களுக்கு செக் வைப்பது போல ஹெச் 1 பி விசாவினை தற்காலிகமாக தடை செய்துள்ளார்.
இதன் காரணமாக இனி இந்திய ஐடி ஊழியர்கள், அமெரிக்கா சென்று பணி புரிய முடியாத நிலையே நீடித்து வருகிறது.
இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் மற்ற ஐடி நிறுவனங்களுக்கும் சற்று பின்னடைவினை கொடுத்தாலும், வேறு வழியில்லையே. இதனால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் சில பிரச்சனைகளை மேற்கொண்டு வருகின்றன.
விசா மறுக்கப்படலாம்
அதோடு ஏற்கனவே அமெரிக்காவின் ஹெச் 1பி விசா மூலம் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு, இரண்டாவது முறையாக விசா மறுக்கப்படலாம். இதனால் அவர்கள் மீண்டும் சொந்த நாடுகளுக்கு திரும்ப நேரிடலாம் என்றும் ஆராய்ச்சி நிறுவனமான நோமுரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விசா தடையினால் ஒரு புறம் உள்ளூர் பணியாளர்களை நியமித்தலை அதிகரித்தாலும், அவுட்சோர்ஸிங் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
பெரிதும் பாதிப்பில்லை
இது குறித்து வெளியான பிசினஸ் இன்சைடர் செய்தியில், இந்த ஆண்டு இறுதி வரை தடை செய்யப்பட்டுள்ள ஹெச் 1பி விசாவால், இந்திய ஐடி நிறுவனங்களை பெரிதும் பாதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் டிசம்பர் 2020-க்கு பிறகும் இந்த நிலை நீடித்தால், சில ஐடி நிறுவனங்கள் சற்று சிரமங்களை காணக்கூடும்.
எந்த நிறுவனங்களூக்கு எல்லாம் சிரமம்?
குறிப்பாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலாஜிஸ், விப்ரோ மற்றும் காக்ணிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சற்று சிரமங்களை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் புதிய விசாக்கள் கிடைப்பதில் சிரமம், பழைய விசா காலம் முடிந்து புதுபிக்க முடியாமையால் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தடை படிப்படியாக அதிகரிப்பு
ஏனெனில் இது இன்று நேற்று நடக்கக்கூடிய விஷயமல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விசாக்கள் தடையானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. அது புதிய விசாவாக இருந்தாலும் சரி, புதுபித்தலாக இருந்தாலும் சரி. நோமுரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டயர் 1 பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் உள்ள ஹெச் 1பி ஊழியர்களின் எண்ணிக்கையானது 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
பிரச்சனை பெரியளவில் இருக்காது
ஆகவே விசாக்கள் வெளியேற்றப்பட்டாலும், பெரியளவிலான பிரச்சனை ஏதும் இருக்காது. இதே இந்தியாவில் தொழில் துறை அமைப்பான நாஸ்காமும், ஹெச் 1பி விசா தடையினால் இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் பிரச்சனையை காண போவதில்லை. தற்போது இருக்கும் நிலையில் குறுகிய கால நோக்கில் பிரச்சனைகள் இருக்கலாம்.
தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை
மேலும் ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் உள்ளூர் பணியாளர்களை பணியில் அமர்த்த தொடங்கி விட்டன. சிறந்த டயர் 1 ஐடி நிறுவனங்கள் 60 - 70 சதவீதம் உள்ளூர் ஊழியர்களை பணியில் அமர்த்த தொடங்கி விட்டன. அதோடு தற்போதைய நிலையில் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் உள்ளனர். ஆக ஐடி நிறுவனங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
வருவாயும் குறையும் & விசாவும் குறையும்
இதே கார்ட்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐடி நிறுவனங்கள் தங்களது செலவினங்களை 8 சதவீதம் குறைக்கலாம் என்று கூறியுள்ளது. இதே நோமுரா கணிப்பின் படி, ஐடி நிறுவனங்களின் வருவாய் 3 - 5 சதவீதம் குறையும் என்றும், குறிப்பாக இது அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்களில் குறையும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்காவின் உள்ள ஐடி நிறுவனங்கள் மேலும் செலவினைக் குறைக்க ஹெச்1பி விசாக்களை சார்ந்திருப்பதை குறைக்ககூடும் என்றும் கூறப்படுகிறது.
ஆக மொத்தத்தில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு இது போறாத காலமே..