இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில்கூட 0.50% ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தது.
இதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த ரெப்போ வட்டி விகித உயர்வு எப்போது எவ்வளவு இருக்கும்? வட்டி விகித உயர்வு எப்போது தான் முடிவுக்கு வரும்? போன்ற தகவல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
ரெப்போ வட்டி விகிதம்
கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் உயர்த்தியதால் ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்தது. அதன் பின்னர் கடந்த ஜூன் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்த்தியதால் ரெப்போ விகிதம் 4.90 சதவீதமாக உயர்ந்தது. இதனையடுத்து மீண்டும் 3வது முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்த்தியதால் ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்தது.
மீண்டும் உயர்வு
இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் மே முதல் செப்டம்பர் வரையில் மொத்தம் 1.4 சதவீத ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த உயர்வு எப்போது?
இந்த நிலையில் அடுத்த ரெப்போ வட்டி விகிதம் எவ்வளவு இருக்கும்? எப்போது உயர்த்தப்படும்? என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டாரங்கள் இது குறித்து தெரிவித்த போது அடுத்த ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் என இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவிகிதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பருக்கு பின்
ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு டிசம்பருக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போது மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கியும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
இந்த நிலையில் வரும் டிசம்பருக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவது நிறுத்தப்பட்டால் பணவீக்கம் 6 சதவீதத்துக்கு கீழே திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலத்தில் பணவீக்கத்தின் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருந்ததால் மந்தமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனை சரி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
திண்டாட்டம் - ஜாக்பாட்
ரெப்போ வட்டி விகிதம் உயர உயர வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பெர்சனல் லோன் உள்பட பல்வேறு கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம் தான். ஆனால் அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.