டெல்லி : நாடு முழுவதும் சுமார் 1,600 குடியிருப்பு கட்டுமான திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கும் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கும் விதத்தில், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிலும் நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையில் ரியல் எஸ்டேட் துறையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 1,600 கட்டுமான திட்டங்கள் முடங்கியுள்ளன.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த புதன் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை மக்களுக்கும் நியாயமான விலையில் வீடு கிடைக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும், பல்வேறு கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் சுமார் 1,600 திட்டங்கள் முடங்கியுள்ளன என்றும், இந்த நிலையில் மத்திய அரசு இத்திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், 25,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்தியில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கும் என்றும், மீதமுள்ள 15,000 கோடி ரூபாய் எல்.ஐ.சியும் ஒதுக்கும் என்றும், மேலும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்தும் நிதி பெறப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த சிறப்பு திட்டங்களுக்கு பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ரியல் ஸ்டேட் துறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இந்த நடவடிக்கை ரியல் எஸ்டேட் சந்தையின் நிலையை நிச்சயம் மேம்படுத்தும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது போன்ற திட்டங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் அனராக் பிராபர்ட்டி கன்சல்டன்ட் தலைவர் அனுஜ் பூரி தெரிவித்துள்ளார். இதே 1.8 டிரில்லியன் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் திட்டங்கள் இந்தியா முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக அனாராக் சொத்து ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் படி 1,600 வீட்டுத் திட்டங்கள் மூலம் சுமார் 4,58,000 வீடுகளும் நிதி பற்றாக்குறையால் முடங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதில் 2,00,000 லட்சம் யூனிட்கள் என்.சி.ஆரிலும், ஒரு லட்சம் வீடுகள் மும்பையிலும், மீதமுள்ள யூனிட்கள் சிறிய நகரங்களிலும் உள்ளன என்றும் ஆய்வாளர்களின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.