டெல்லி : நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. பல துறைகளும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதன் விளைவாக அடுத்து காலாண்டுகளிலும் சரி, நடப்பு நிதியாண்டிலும் வளர்ச்சி குறையும் என பல மதிப்பீட்டு நிறுவனங்கள் மதிப்பிட்டு வருகின்றன.
மறுபுறம் பல எதிர்கட்சிகளும் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியிலேயே இருப்பதாகவும் கூறி வருகின்றன. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என தில்லாக பதில் கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த புதன் கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பொருளாதார வீழ்ச்சி குறித்து பேசியபோது, நாட்டின் பொருளாதாரத்தில் சற்று தேக்க நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை என்று தில்லாக பதில் கூறியுள்ளார். பொருளாதாரம் சற்று தேக்க நிலையை சந்தித்துள்ளது உண்மை தான். இது தொடர்பாக அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதுவும் எடுக்கப்படும் ஒவ்வொரு அடியும் நாட்டின் நலனுக்காகவே விவேகமான பார்வையில் எடுத்து வரப்படுகிறது. விவேகமான பார்வையில் பொருளாதாரத்தைப் பார்க்கும் போது வளர்ச்சி குறைந்து விட்டிருக்கலாம் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் அது மந்த நிலை அல்ல. அது எப்போதும் மந்த நிலையாகவும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் மந்த நிலை குறித்த கவலைகளைத் தெரிவித்த அவர், நேரடி வரி மற்றும் ஜிஎஸ்டி வசூல் ஆகிய இரண்டும் நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
சில்லறை வணிகங்கள், கார் தயாரிப்பாளர்கள், வீட்டு விற்பனை மற்றும் கனரக தொழில்கள் ஆகியவற்றிற்கு வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பரவியுள்ள நிலையில், இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி பார்வை கடுமையாக பலவீனமடைந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவிகிதமாக இருந்து. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. அதிலும் சமீபத்திய கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பு உள்ளிட்ட சமீபத்திய நிதி தூண்டுதல்கள் இருந்த போதிலும் கூட இப்படி ஒரு வீழ்ச்சியை பொருளாதாரம் கண்டு வருகிறது.
ஒரு புறம் அதிகரித்து வரும் வாராக்கடன்கள், வங்கியின் மீதான இருப்பு நிலை காரணமாக, கடந்த இரண்டு நிதியாண்டுகளில் ஜிடிபி விகிதம் வீழ்ச்சியடைந்ததாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையிலேயே வங்கிகளுக்கு தற்போது மறு மூலதனமாக 70,000 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இது வங்கிகளின் கடன் வழங்கும் திறனை உயர்த்த வழிவகுத்தது. மேலும் சமீபத்திய அவுட் ரீச் திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் கோடிக்கு மேல் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பணப்புழக்க சிக்கலை இதுவரை காணவில்லை என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
இது மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த கட்டாயப்படுத்தியது. ஜிஎஸ்டி பற்றி கூறியவர் ஜிஎஸ்டி மோசமாக ஒன்றும் செயல்படவில்லை. இது நன்றாகத் தான் போய் கொண்டிருக்கிறது என்றும் கூறியவர், கடந்த 2014 -15ல் நேரடி வரி - ஜிடிபி விகிதம் 5.5 சதவிகிதமாக இருந்தது. இது 2018 - 2019ல் 5.98 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இதுவே வருவாய் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வருவாய் செலவுகள் 13.97 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இதே மூலதன செலவினங்கள் 15.31 சதவிகிதம் நாப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே கடந்த 2009 - 2014ல் அன்னிய நேரடி முதலீடுகள் 189.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதே அடுத்த ஐந்து ஆண்டுகளின் பிஜேபி ஆட்சியில் 283.9 பில்லியன் டாலர்களாக இருந்தது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் நரேந்திரமோடி தனிப்பட்ட அக்கறை எடுத்து வருவதாகவும், இதனால் பொருளாதாரம் உயர்ந்த பாதையில் செல்ல இது வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.