பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கைக்குப் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்தாலும் சந்தை கணிப்பின் படி இந்தப் பட்ஜெட் அறிக்கை கடந்த ஆண்டை போலவே வளர்ச்சி, உற்பத்தி, வேலைவாய்ப்பு சார்ந்து தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தனிநபர் சலுகைகள் கிடைப்பதிற்கு 50 : 50 சான்ஸ் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான விஷயத்தைப் பேசியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது மிடில் கிளாஸ் மக்களின் பிரச்சனைகளும், சவால்களும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், மோடி அரசு மிடில் கிளாஸ் மக்களைப் பாதிக்கும் அளவிற்கு எந்த வரியும் விதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
வருமான வரி
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வருமான வரிக் குறைப்பு, மிடில் கிளாஸ் மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு, சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி உயர்வு போன்றவை முக்கியத் தேவையாக இருக்கும் வேளையில் பட்ஜெட் 2023 அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜனவரி 31 பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது.
மிடில் கிளாஸ் குடும்பம்
இந்த நிலையில் RSS வார இதழான Panchjanya பத்திரிக்கை நடத்திய விழாவில் கலந்துக்கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நானும் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளேன், மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் எனக்கும் புரியும் எனப் பேசினார்.
டாக்ஸ் ரிபேட் சேவை
தற்போது வரையில் மோடி அரசு மிடில் கிளாஸ் மக்கள் மீது எவ்விதமான புதிய வரி விதிக்கவில்லை, இதேபோல் 5 லட்சம் ரூபாய் வரையில் டாக்ஸ் ரிபேட் சேவை வழங்கப்பட்டு உள்ளது எனப் பேசினார்.
மெட்ரோ ரயில் திட்டம்
மேலும் அவர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தையும், 100 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் செயல்படுத்தி ease of living அளவீட்டை மேம்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.
மோடி அரசு
இதோடு நிர்மலா சீதாராமன், மோடி அரசு மிடில் கிளாஸ் மக்களுக்கும் இன்னும் அதிகமான பயன்களை அளிக்கும் தேவைகளை அளிக்கும் என உறுதி அளித்தார். இந்திய பொருளாதாரத்தில் பெரும் பகுதி மக்கள் மிடில் கிளாஸ் மக்களாக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார், இதனால் மோடி அரசு மிடில் கிளாஸ் மக்களை ஒரு போதும் கைவிடாது என்றும் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகள்
நடப்பு நிதியாண்டில் இந்திய அரசின் மூலதன செலவுகள் 35 சதவீதம் அதிகரித்து 7.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கி துறையில் மத்திய அரசின் 4R strategy திட்டம் மூலம் பொதுத்துறை வங்கிகளைப் பெரும் சரிவில் இருந்து மீட்டு எடுத்து உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இதன் எதிரொலியாக வங்கிகளின் வாராக் கடன் அளவு சரிந்துள்ளது, பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆரோக்கியமும் மேம்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் வருமானம்
மேலும் விவசாயிகளின் நிலை குறித்து பேசும் போது மத்திய அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்யும் முயற்சிகளை மோடி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.