கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் பெட்ரோல், டீசல் விலை எப்போது உயரும் எனத் தெரியாமல் நிலை இருக்கும் வேளையில் அனைவரின் கண்களும் எலக்ட்ரிக் கார்கள் மீது தான் உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் வாங்க மக்கள் தயாராக இருந்தாலும், போதுமான உற்பத்தி இல்லை அதேபோல் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களும் வாங்கும் வண்ணம் எலக்ட்ரிக் கார் விலை குறைவாகவும் இல்லை.
எலக்ட்ரிக் கார்கள்
இந்த நிலை அடுத்த ஒரு வருடத்தில் முற்றிலும் மாற்றப்போவதாகத் தெரிவித்துள்ளார் நித்தின் கட்கரி. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்கரி செய்தியாளர்களிடம் பேசுகையில் இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்தியாவில் பெட்ரோல் கார்களுக்கு இணையான விலையில் எலக்ட்ரிக் கார்கள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
எத்தனால் எரிபொருள்
இதேவேளையில் மத்திய அரசு விவசாயப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால்-ஐ பெட்ரோல், டீசலுக்கு மறாகப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக நித்தின் கட்கரி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல்
இதன் வாயிலாகப் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறைவது மட்டும் அல்லாமல் இறக்குமதி செய்யும் அளவும் குறையும். இதன் மூலம் இந்திய தனது டாலர் இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்து ரூபாய் மதிப்பை மேம்படுத்து வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும்.
கடல் வழி பயணத்தை
மேலும் அவர் மத்திய அரசு பசுமை எரிபொருளை பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது. இதேநேரத்தில் சாலை போக்குவரத்தை காட்டிலும் கடல் வழி பயணத்தை மிகவும் குறைந்த விலையில் செய்ய முடியும் என்பதால் கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்த அதிகளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்தார்.
நெட் ஜீரோ இலக்கு
இந்திய அரசுக்கு நெட் ஜீரோ இலக்கை விரைவில் அடைவது முக்கியமானதாக உள்ளது. இதனால் எலக்ட்ரிக் வாகனம், பசுமை எரிபொருள், கடல் வழி போக்குவரத்து எனப் பல திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது. இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சியின் வேகத்தைப் பல மடங்கு உயர்த்த வழி வகுக்கும்.