பிரதமர் மோடி தலைமையிலான அரசு அடுத்த 4 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான மூலதனத்தினை, அரசின் பல துறைகளை சார்ந்த நிறுவனங்களின் பங்கு விற்பனை, சொத்து விற்பனை மூலமாக திரட்ட உள்ளதாக அறித்துள்ளது.
குறிப்பாக மத்திய அரசின் வசம் இருக்கும் மின்சாரம், நெடுஞ்சாலை துறைகள், விமானத் துறை, சுரங்கம், ரயில்வே உள்ளிட்ட 13 துறைகளில் இருக்கும் சில நிறுவனங்களின் பங்குகள், சொத்துக்களை பணமாக்குதல், தனியாருக்கு குத்தகைக்கு விடுதல், இணைப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றின் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
அரசின் இந்த திட்டம் மூலம் திரட்டப்படும் நிதியினை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம்
ஆக மொத்தத்தில் அரசின் இந்த சொத்துக்களை விரயமாக்கி அதன் மூலம் அரசின் பாரத்மாலா, சாகர் மாலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதெல்லாம் சரி அதென்ன பாரத்மாலா, சாகர் மாலா? வாருங்கள் பார்க்கலாம். பொதுவாக ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருந்தால், பொருளாதாரம் வேகமாக வளார்ச்சி காணும். முதலீடுகள் அதிகரிக்கும். இதன் மூலம் நாடு செழிப்பாகும் என்பது அரசின் கருத்து. ஆனால் நாட்டில் இருக்கும் வளங்களை அழித்து அதன் மூலம் கிடைக்கும் வளர்ச்சி எந்தளவு பயன் கொடுக்கும் என்பது சாமனியர்களின் கருத்து.
பாரத் மாலா, சாகர்மாலா திட்டங்களில் கவனம்
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆரம்ப காலத்தில் இருந்தே உள்கட்டமைப்பு துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் NMP திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி மூலம் பாரத் மாலா, சாகர்மாலா போன்ற திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் மாலா என்றால் என்ன?
பாரத் மாலா திட்டம் என்பது பிரதமர் மோடி அரசின் ஒரு கனவு திட்டம் எனலாம். இது மிகுந்த ஆழ்ந்த சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டமாகும். இது எல்லைப்பகுதிகள், கடலோர பகுதிகள், துறைமுகங்கள், சுற்றுலா தலங்கள் என பலவற்றையும் இணைக்கும் ஒரு விரிவான சாலை அமைப்பினை உருவாக்க போடப்பட்ட ஒரு முக்கிய திட்டமாகும்.
சாகர்மாலா திட்டம் என்றால் என்ன?
சாகர்மாலா திட்டம் என்பது துறைமுகம் கொணரும் ஒரு செழிப்பான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் மொத்தமுள்ள 7000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையும், 14,500 கிலோமீட்டர் நீளமுள்ள உள்நாட்டு நீர் வழிகளையும். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப சரக்கு போக்குவரத்திற்கானதாக மாற்றும் ஒரு திட்டமாகும். அதோடு கடல் எல்லைகளில் உள்ள 200 துறைமுகங்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் இந்திய பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம்.
வளர்ச்சி காரணம் உள்கட்டமைப்பு திட்டம்
இன்று வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே, அந்த நாட்டின் உள்கட்டமைப்பு திட்டம் தான் முக்கிய காரணம் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ஆக இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சியினை மேம்படுத்தினால், நிச்சயம் பொருளாதாரம் மேம்படும் என்பது அரசின் திட்டமாக உள்ளது. ஆக அதற்கு தேவையான நிதியினை தேசிய பணமயமாக்கல் திட்டத்தின் மூலம் திரட்ட முயல்கிறது.
எதற்காக நிதி திரட்டல்
இதற்காகத் தான் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கவும், குத்தகைக்கு விடுதல் என பலவகையிலும் நிதி திரட்ட திட்டமிட்டு வருகின்றது. இது ஒரு புறம் சரியான காரணமாக இருந்தாலும், இன்று மக்களின் தேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில்வே, மின்சாரம், விமானத்துறை, தொலைத்தொடர்பு துறை, மின்சார உற்பத்தி, இயற்கை எரிவாயு, எரிபொருள், கப்பல் துறை என பல துறைகளில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
தனியார் துறையினரின் பங்கீடு
இதனால் தனியார் துறையின் பங்கீடு வரும்போது, அது மக்களுக்கு மேற்கொண்டு பாதிப்பினைத் தான் தரும் என பல தரப்பிலும் கருத்துகள் வெளியாகி வருகின்றன. உதாரணத்திற்கு மின்சார துறையில் தற்போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தொழிற்துறைகளுக்கு மின்சார சலுகைகள், தனி நபர்களுக்கு கிடைத்து வரும் சலுகைகள் கிடைக்குமா? தனியார் துறையின் பங்கீட்டினால் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம், செலவினங்கள் அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.
லாபமா? நஷ்டமா?
அரசின் இந்த திட்டம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தான் சாதகமாக இருக்கும். ஆனால் மேற்கண்ட பல வசதிகளையும் பயன்படுத்த மக்கள் அதிக கட்டணங்களை கொடுக்க வேண்டியிருக்கும். சொல்லப்போனால் முன்பை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். மொத்தத்தில் அரசின் இந்த முடிவு ஆளூம் தரப்பில் சரி என்று கூறப்பட்டாலும், மறுபுறம் மக்கள் தரப்பில் இருந்து பார்க்கும் போது யோசிக்க வேண்டிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன எங்களோடு பகிருங்கள்