இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பீர் தயாரிப்பு நிறுவனமான Bira91 கொரோனாவால் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிலும், மத்திய அரசு சீன முதலீடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டி சுமார் 30 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது.
இந்தச் செய்தி தற்போது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியாகவே விளங்குகிறது.
Bira91
பல்வேறு சுவை கொண்ட பீர்-களைத் தயாரிக்கும் Bira91 நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், தயாரிப்பு அளவுகளை அதிகரிக்கவும் சீன முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டது. அப்போது தான் மத்திய அரசு பல்வேறு அரசியல் மற்றும் பாதுகாப்பின் காரணமாக இந்தியாவில் செய்யப்படும் சீன முதலீட்டிற்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் Bira91 நிறுவனத்தின் முதலீடு ஈர்க்கும் முயற்சி தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
மத்திய அரசின் அறிவிப்பை அடுத்த FII மற்றும் FPI அமைப்புகளும் கட்டுப்பாடுகளையும், கண்காணிப்பையும் அதிகரித்தது.
முதலீடு
சீனா முதலீட்டாளர்களைத் தடை என நினைக்காமல் Bira91 நிறுவனம், தன்னுடைய பழைய முதலீட்டாளர்களிடமே முதலீட்டை ஈர்க்க தயாரானது. இதன் எதிரொலியாக முன்னணி நுகர்வோர் துறை முதலீட்டு நிறுவனமான Sixth Sense மற்றும் கொரிய முதலீடு நிறுவனமான நியோப்ளெக்ஸ் ஆகியோர் தலைமையில் சிகோயா மற்றும் சோபினா ஆகிய முதலீட்டாளர்களுடன் இணைந்து சுமார் 30 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.
30 மில்லியன் டாலர்
Bira91 நிறுவனம் இந்த 30 மில்லியன் டாலர் முதலீட்டைத் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக அதிகளவில் பயன்படுத்த உள்ளது. குறிப்பாக இந்தியாவின் தலைசிறந்த, அதிகம் விற்பனையாகும் ப்ரீமியம் பீர் பிராண்டுகளில் ஒன்றாக உயர இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 2018-19ஆம் நிதியாண்டில் வெறும் 50 நகரங்களில் மட்டுமே விற்பனையாகி வந்த Bira91 பீர் 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 400 நகரங்களில் விற்பனை செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி Kingfisher வர்த்தகத்தைக் கணிசமாகப் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை.
சீனா முதலீட்டாளர்கள்
Bira91 நிறுவனத்தில் முதலீடு செய்யச் சில சீன முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர். ஆனால் மத்திய அரசின் திடீர் கட்டுப்பாட்டின் காரணமாகச் சீன முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை ஈர்க்கும் முயற்சியைக் கைவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு வெறும் 2.04 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்த சீன முதலீட்டாளர்கள் வெறும் ஒரு வருட காலத்தில் 2 மடங்கு அதிகமாக முதலீடு செய்துள்ளனர். 2019இல் சீன முதலீட்டாளர்கள் 3.9 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.
3வது பெரிய நாடு
உலகிலேயே அதிக மதுபான வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மதுபானம் பீர், அதனைத் தொடர்ந்து விஸ்கி.
சரி உங்களுக்கு Bira91 பீர் பிடிக்குமா..? இல்லை வேறு எந்த மதுபானம் பிடிக்கும்..? கமெண்ட் பதிவிடும் தளத்தில் தெரிவிக்கவும்.