ஓலா, உபர் கால் டாக்சி நிறுவனங்களுக்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த இளைஞர்கள் தொடங்கிய டிரைஃப் என்ற கால்டாக்ஸி மிகவும் பிரபலமாகி வருகிறது.
சிறந்த நிர்வாகம், அனுபவமுள்ள டிரைவர்கள், கமிஷன் இல்லாத முறை ஆகியவை வாடிக்கையாளர்கள் மற்றும் டிரைவர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு காரணமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஓலா, உபர் நிறுவனங்கள் கமிஷன் பெற்று வரும் நிலையில் டிரைஃப் நிறுவனம் கமிஷன் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.
டிரைஃப் கால்டாக்சி
கடந்து 2021 ஆம் ஆண்டு பெங்களூரில் டிரைஃப் என்ற கால்டாக்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. பிர்டோஷ் மற்றும் இணை நிறுவனர்கள் சூர்யா ரஞ்சித், முதித் முத்ரா, ஆகியோர்கள் கமிஷன் தராத வகையில் கால் டாக்சி சேவை நிறுவனத்தை தொடங்கினார்கள்.
வாரம் 1000 சவாரிகள்
பெங்களூரில் முதல்கட்டமாக தொடங்கியுள்ள டிரைஃப் நிறுவனம் வாரம் 1000 சவாரிகள் செய்து கொண்டிருப்பதாகவும் ஆண்ட்ராய்ட், ஐபோன் செயலிகள் மூலம் சவாரிகள் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரே தேர்வு செய்யலாம்
ஓலா, உபர் சேவை போலவே இந்த கால் டாக்சி சேவையும் பிக்கப் மற்றும் செல்லும் இடத்தை செயலி மூலம் தெரிவித்தால் உடனடியாக அருகிலுள்ள டிரைவர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வார்கள். ஆனால் அதே நேரத்தில் ஓலா, உபர் நிறுவனங்கள் போல் அல்லாமல் வாடிக்கையாளர்கள் தாங்கள் செல்லும் இடத்தை செயலி மூலம் கூறியவுடன் அவர்களுக்கு அருகில் உள்ள டிரைவர்களின் இருப்பிடங்கள் காண்பிக்கப்படுகின்றன. அதில் ஒருவரை வாடிக்கையாளரே தேர்வு செய்யலாம்.
கட்டண விபரங்கள்
வாடிக்கையாளர் டிரைவரை தேர்வு செய்த அடுத்த நிமிடமே கட்டணங்கள் உள்பட அனைத்து விவரங்களும் செயலியில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டண விபரங்கள் திருப்தி என்றால் வாடிக்கையாளர் அந்த சவாரியை மேற்கொள்ளலாம்.
ஓலா- உபர்
ஓலா, உபர் போன்ற நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் சவாரிக்கு நிறுவனங்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்கின்றன. அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் டிரைவர்களுக்கு கமிஷனாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 30 முதல் 40% டிரைவர்களுக்கு தரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கமிஷன் இல்லை
ஆனால் டிரைவ் கால் டாக்சியில் இது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. டிரைவர்களுக்கு கமிஷன் என்பது கிடையாது. ஆனால் அதே நேரத்தில் சவாரியின் கட்டணத்தை டிரைவர் முடிவு செய்யலாம். குறிப்பாக வாடிக்கையாளரின் சவாரிக்கு ஆயிரம் ரூபாய் என்று டிரைஃப் கட்டணம் நிர்ணயித்து இருந்தால் அதனை 1500 ரூபாய் என்று டிரைவர் மாற்றிக் கொள்ளலாம். வாடிக்கையாளர் அந்த தொகையை ஏற்றுக் கொண்டால் 500 ரூபாய் டிரைவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவர்களுக்கு உடனடி பணம்
இந்த திட்டத்தில் டிரைவருக்கு ஒரு சவாரிக்கு எவ்வளவு என்பது உடனடியாக தெரிந்து விடும். கைக்கும் உடனடியாக பணம் வந்துவிடும் என்பதால் டிரைவர்கள் இந்த முறையை விட மிகவும் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
வாடிக்கையாளர் - டிரைவர்
அதேபோல் வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் தான் டிரைவர்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதால் வாடிக்கையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஆகிய இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் வகையான திட்டமாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.