டெல்லி: பொதுவாக எந்தவொரு அசாதாரண சூழ்நிலையினாலும் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே.
அதிலும் தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது அடித்தட்டு மக்கள் எனலாம்.
ஏனெனில் ஒரு புறம் தங்களது வருமானத்தினை இழந்து, கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் தங்களது வேலையினை இழந்து, ஊரடங்கு முடிந்தாலும் உடனடியாக வேலைக்கு செல்லும் நிலையிலும் இல்லை.
மீட்பு நடவடிக்கை
இப்படி மக்களை ஒவ்வொரு புறமும் பாடாய் படுத்தி வரும் கொரோனா இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை. இன்றைய நாளில் மக்கள் பல வகையிலும் இன்னல்களை சந்தித்து தான் வருகின்றனர். உதாரணத்திற்கு கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் அரசு ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. இதனால் வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு சில மீட்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இலவச உதவி பெற ரேஷன் கார்டு இல்லை
அதன் ஒரு பகுதி தான் இலவச அரிசி, எண்ணெய் பருப்பு, 1000 ரூபாய் உதவித் தொகை. இது வறுமையால் தவிக்கும் அடித்தட்டு மக்களுக்கு உதவும் என்ற நோக்கில் அரசு உதவி செய்ய முன் வந்துள்ளது. ஆனால் இதிலும் சில பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஏனெனில் சிலருக்கு ரேஷன் கார்டுகள் கிடையாது. இதனால் அவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது. ஆக அவர்கள் அரசின் உதவியும் கிடைக்காமல், வேலைக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
அரசின் உதவி போதுமானதா?
இதே 5 பேர் அடங்கிய குடும்பத்திற்கு அரசு கொடுக்கும் இந்த 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை போதுமானதா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் மத்திய அரசின் உதவித்தொகை, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் விதிமுறைகள் பொருந்தக் கூடியவர்களுக்கே கிடைக்கும். இந்தியாவில் சுமார் 800 மில்லியன் மக்கள் அல்லது இந்திய மக்கள் தொகையில் சுமார் 62% மக்களை மட்டுமே இது உள்ளடக்கியது.
உதவித் தொகை இல்லை
இதே தமிழகத்தில் 2.10 கோடி அரிசி கார்டுகள் உள்ளன. இவற்றில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வரும் 1.11 கோடி கார்டுகளுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கும். அதாவது 6.70 கோடி பயனாளிகளில், 3.5 கோடி பேர் மட்டுமே மத்திய அரசு அறிவிப்பின் கீழ் பயன்பெறுவர். ஆக மீதம் இருப்போருக்கு அந்த உதவித் தொகை கிடைக்காது.
உதவி கிடைக்காது
இதுபோல் மத்திய அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் அனைத்துப் பயனாளிகளுக்கும் கிடைக்காது. மத்திய அரசின் முதியோர் ஓய்வூதியத் திட்டம், விதவையர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பயனடைவோருக்கு மட்டுமே பலன் கிடைக்கும். ஆக மற்றவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது. பொதுமுறை வினியோக முறையின் பயனாளிகளின் பட்டியல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கபடவில்லை.
கஷ்டம் தான்
ஆக நாட்டில் மக்கள் புலம் பெயர்ந்தோர், நாடு விட்டு நாடு விலகியோர் என பலருக்கும் இந்த சலுகைகள் கிடைக்காது. ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும் இழந்து வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு, இப்படி அரசின் உதவி தொகையும் பெற முடியாத சூழ்நிலையில் தான் தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் மேலும் சிறுசிறு அத்தியாவசிய தேவைக்கு கூட கஷ்டப்படும் அவல நிலை தான் உள்ளது.