உலகம் முழுவதிலும் உள்ள பல நிறுவனங்கள் தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறையை முடித்துக்கொண்டு அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் என்ற முறையை மாற்றி உள்ளது.
ஒரு சில நிறுவனங்கள் ஹைப்ரிட் முறைக்கு மாறி உள்ளது என்றாலும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தங்களது ஊழியர்களை கட்டாயம் வேலைக்கு திரும்புமாறு உத்தரவிட திட்டமிடவில்லை என கூறியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வொர்க் ஃப்ரம் ஹோம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறையை கடைபிடித்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் ஊழியர்கள் அலுவலத்திற்கு திரும்பி உள்ளனர் என்பது தெரிந்ததே. இருப்பினும் ஒரு சில நிறுவனங்களில் இன்னும் ஹைபிரிட் மாடலில் மட்டுமே ஊழியர்கள் அலுவலத்திற்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் சி.இ.ஓ
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அவர்கள் தங்களுடைய ஊழியர்களை உடனடியாக அலுவலகத்திற்கு வேலைக்கு திரும்புமாறு உத்தரவிட திட்டமிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வொர்க் ஃப்ரம் ஹோம்
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் பதவியேற்ற ஆண்டி ஜாஸ்ஸி சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த கோட் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், 'ஊழியர்கள் உடனடியாக அலுவலகத்திற்கு திரும்பி வர வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் இல்லை. படிப்படியாக ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஒருசில ஊழியர்களை இன்னும் சில காலத்திற்கு வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணி செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை
இதே மாநாட்டில் கலந்து கொண்ட கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, தங்களது ஊழியர்கள் கண்டிப்பாக அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில் அமேசான் சி.இ.ஓ இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் ஊழியர்கள்
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் தொற்றுநோய் வேகமாக பரவி வருவதால் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கூறியது. கடந்த அக்டோபரில், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்ஸி, அலுவகத்திற்கு திரும்புமாறு ஒருசில ஊழியர்களை கூறினாலும் இன்னும் பல ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் ஹைப்ரிட் முறையில் தான் பணி செய்து வருகின்றனர்.
ஹார்ட்வேர் யூனிட்
ஹார்ட்வேர் மற்றும் கிரியேட்டிவ் யூனிட்கள் போன்ற சில குழுக்கள் அவ்வப்போது அலுவலகத்திற்கு வருவார்கள் என்றும், பொறியாளர்கள் உள்பட மற்ற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிசெய்வார்கள் என்றும் அமேசான் சி.இ.ஓ தெரிவித்தார்.
ஆப்பிள் ஊழியர்கள்
ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் தனது சில ஊழியர்களை இந்த மாதம் தொடங்கி வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளது. அதேபோல் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், டெஸ்லா ஊழியர்களுக்கு மே 2022 முதல் அலுவலகத்திற்கு வேலைக்குத் திரும்ப வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.