டெல்லி: ஆதார் கிட்ட தட்ட இந்தியர்களின் அடையாளமாகி விட்டது. இந்த ஆதார் எண்களை எங்கு எல்லாம் பயன்படுத்த வேண்டும், எதற்கு எல்லாம் பயன்படுத்தக் கூடாது என கடந்த செப்டம்பர் 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்குப் பின் கூட ஆதார் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தள கணக்குகளுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டுமா என ஒரு சர்ச்சை கிளம்பியது.
அமைச்சர் பதில்
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராளுமன்ற மக்களவையில் பேசும் போது இந்த ஆதார் சர்ச்சைக்கும் விடை அளிக்கும் விதத்தில் பேசி இருக்கிறார். இதுவரை ஃபேஸ்புக், ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுடன், ஆதார் எண்களை இணைப்பது குறித்து எந்த ஒரு சட்டமும் பேசப்படவில்லை, கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கவும் இல்லை எனச் சொல்லி இருக்கிறார்.
கேள்வி
எதிர்கட்சியினர்கள் மற்றும் சுயேட்சை மக்களவை உறுப்பினர்கள், ஆதார் எண் குறித்து பேசும் போது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களுடன் ஆதார் எண்களை இணைக்க ஏதாவது சட்டம் இயற்ற இருக்கிறீர்களா..? எனக் கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு தான் பதில் கொடுத்த் இருக்கிறார் அமைச்சர்.
அமைச்சர் பேச்சு
இந்த கேள்விக்கு நேரடி பதில் போக, கொஞ்சம் பெரிதாகவே பதில் கொடுத்து இருக்கிறார் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத். ஆதார் 3 முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது. 1. குறைந்தபட்ச விவரங்கள், 2. தேவையற்ற விவரங்களைக் களைவது, 3. இந்தியா முழுக்க கூட்டாக பயன்படுத்துவது எனச் சொல்லி இருக்கிறார்.
ஆதார்
அதோடு, ஆதாரின் வாழ் நாளில், ஆதார் எண் பெறுபவர்கள், முதல் முறை கொடுக்கும் விவரங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்குகிறது. அந்த முதல் முறை விவரங்களில், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்களும் மக்கள் கொடுத்தால் தான் பதிவாகின்றன. இந்த பயோ மெட்ரிக்ஸ் போன்ற அனைத்து விவரங்களும் பாதுகாப்பாக என்க்ரிஃப்ட் செய்யப்பட்டே வைக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்.
என் ஆர் ஐ
வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆதார் எண்ணைப் பெற முடியுமா..? என்கிற கேள்விக்கு, என் ஆர் ஐ-க்கள் இந்தியா வந்த பின் ஆதார் எண்ணுக்கு முறையாக விண்ணப்பித்து, பயோ மெட்ரிக்ஸ் போன்ற விவரங்களைக் கொடுத்து பெறலாம் என பதில் சொல்லி இருக்கிறார் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
என் ஆர் ஐ வாங்கி இருக்கிறார்களா
கடந்த செப்டம்பர் 20, 2019-ல் இருந்து, கடந்த நவம்பர் 01, 2019 வரையான சுமார் இரண்டு மாத காலத்தில், 2800-க்கும் மேற்பட்ட வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஆதார் எண்ணைப் பெற்று இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.