வாழ்கையில் ஒரு முறை எம்பி, எம் எல் ஏ ஆகிவிட்டாலே போதும், ஒரே ஜாலி தான். பென்ஷன் காசு, அரசு பங்களா, மலிவு விலையில் தரமான சாப்பாடு, போக்குவரத்து சலுகைகள் என ஜமாயிக்கலாம்.
இப்போது கூட பாராளுமன்ற கேண்டீனில், மலிவு விலையில் தரமான உணவுகள் கிடைத்து வருகின்றன. இந்த மலிவு விலை (மானிய விலை) கேண்டீனில்
டீ 5 ரூபாய்
காபி 5 ரூபாய்
பிரெட் பட்டர் 6 ரூபாய்
வடை 12 ரூபாய்
கட்லட் 18 ரூபாய்
அவல் உப்புமா 18 ரூபாய்
போண்டா 7 ரூபாய்
சூப் 14 ரூபாய்
கேசரி 24 ரூபாய்
சைவ தாலி 35 ரூபாய்
வெஜ் கரி 7 ரூபாய்
தால் (பருப்பு) 5 ரூபாய்
சப்பாத்தி 2 ரூபாய்
பாயாசம் (கீர்) 18 ரூபாய்
சாலட் 9 ரூபாய் என சைவ உணவுகளை விற்று வருகிறார்கள்.
அசைவ உணவு
சிக்கன் கரி (கிரேவி) - 50 ரூபாய்
சிக்கன் பிரியாணி (கோழி பிரியாணி) - 65 ரூபாய்
சிக்கன் ப்ரை - 60 ரூபாய்
மட்டன் கரி (கிரேவி) - 40 ரூபாய்... என ஏழை அரசியல்வாதிகளுக்கு மானிய விலையில் அசைவ உணவுகளை விற்று வருகிறார்கள்.
ஒப்புதல்
இன்று பாராளுமன்றத்தில் வியாபார ஆலோசனைக் குழுவில் (Business Advisory Committee), இந்த மானிய விலை உணவை குறித்து பேசிய போது எல்லா கட்சி எம்பிக்களும் மானிய விலை உணவை விட்டுக் கொடுக்க ஒரு மனதாக ஒப்புக் கொண்டிருப்பது வரவேற்புக்குரியது. இன்று முதல் மானிய விலை ரத்து நடைமுறைக்கு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
கடைசி நாள்
எனவே இன்று முதல் (டிசம்பர் 05, 2019, வியாழக் கிழமை) பாராளுமன்ற கேண்டீனில் மானிய விலைக்கு உணவு வழங்க மாட்டார்கள் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். கூடிய விரைவில் பாராளுமன்ற கேண்டினில் அனைத்து உணவுகளும் சந்தை விலைக்கு கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
17 கோடி செலவு
இந்த மானிய விலை கேண்டீனால் சுமார் 17 கோடி ரூபாய் மானியமாக செலவாகி வருகிறதாம். இந்த 17 கோடி ரூபாய் ஒரு ஆண்டுக்கான செலவா அல்லது ஒரு மாதத்துக்கான மானிய செலவா ..? என குறிப்பிடவில்லை. சமீபத்தில் கூட பாராளுமன்ற கேண்டீனில் விற்கும் உணவுகளின் விலையை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
எம்பிக்கள்
இந்தியாவில் மொத்தம் 545 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆக மொத்தம் சுமார் 800 பேருக்கு 17 கோடி ரூபாய் மானியம் என்பது கொஞ்சம் அதிகம் தான். எப்படியோ, இப்போதாவது கொஞ்சம் மனசாட்சி உறுத்தி, எம்பிக்களே முன் வந்து மானிய விலை கேண்டீனை மூடி இருக்கிறார்களே அதுவரை நல்லது.