டெல்லி: இது சொமாட்டோவின் கெட்ட காலம் போல. தொடர்ந்து உணவகங்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது மீண்டும் ஒரு பிரச்னையை கையில் எடுத்து இருக்கிறது உணவகங்கள்.
எத்தனை உணவகங்கள் என்றால்... 8000 உணவகங்கள். இவர்கள் (8000 உணவகங்கள்) இனி சொமாட்டோவின் கோல்ட் டெலிவரி திட்டத்தின் கீழ், உணவுகளை டெலிவரிக்கு கொடுக்கப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம், ஏன் திடீர் என சுமார் 8000 உணவகங்கள் சொமோட்டோக்கு எதிராக போர் கொடி தூக்குகிறார்கள் என விரிவாகப் பார்ப்போம்..!
ஆஹார் சங்கம்
இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கத்தில் சுமார் 8,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த சங்கம் ஏற்கனவே, சொமாட்டோவின் கோல்ட் டெலிவரி திட்டத்தை விமர்சித்துக் கொண்டு தான் இருந்தது. இந்த திட்டத்தால் தங்கள் வியாபாரத்தில் லாபம் பெரிதும் அடி வாங்குவதாகச் சொன்னார்கள்.
பதில் இல்லை
அதோடு, சொமாட்டோ முறையாக பதிவு செய்யாத உணவகங்களில் இருந்து உணவுகளை டெலிவரி செய்ய ஆர்டர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது, சொமாட்டோ கோல்ட் வாடிக்கையாளர்களுக்கு சொமாட்டொ நிறுவனம் கொடுக்கும் கூடுதல் தள்ளுபடிகளை குறைப்பது மற்றும் சொமாட்டோ டெலிவரி எக்ஸிக்யூட்டிவ்கள் கிடைக்காதது என பல பிரச்னைகளைச் சொன்னார்கள்.
ஹோட்டல் சங்கம்
சொமாட்டோ கோல்ட் திட்டம் தங்களுக்கு சரிப்பட்டு வரவில்லை என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். அதோடு சொமாட்டோ கோல்ட் திட்டத்தை ரத்து செய்யும் படியும் நேரடியாக சொமாட்டோவிடம் சொல்லி இருக்கிறார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என ஹோட்டல் சங்கத் தலைவர் சந்தோஷ் ஷெட்டியே சொல்லி இருக்கிறார்.
நஷ்டம்
ஏற்கனவே சொமாட்டோ கோல்ட் டைன் அவுட் என்கிற பெயரில் வந்த திட்டம், ஹோட்டல்களுக்கு ஒத்து வராமல் பெரிய பிரச்சனை ஆனது நினைவில் இருக்கலாம். அதே போல இப்போது மீண்டும் சொமாட்டோ கோல்ட் டெலிவரியிலும் ஹோட்டல்களுக்கு நஷ்டம் தான் அதிகரித்துக் கொண்டு இருக்கிறதாம்.
எப்படி நஷ்டம்
சொமாட்டோ கோல்ட் டெலிவரி திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டர்களுக்கும், ஒரு இலவச டிஷ் கொடுக்க வேண்டி இருக்கிறதாம். அதோடு டெலிவரிக்கு 22 - 25 சதவிகிதம் கமிஷன் வேறு கொடுக்க வேண்டி இருக்கிறதாம். இதனால் வியாபாரத்தில் வரும் வருமானம் குறைவதாகச் சொல்கிறார்கள்.
தொடரும் சிக்கல்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் சொமாட்டோவின் கோல்ட் டைன் இன் திட்டத்தில் இருந்து பல உணவகங்கள் வெளியேறியது. அப்போதும் கூடுதலாக தள்ளுபடி கொடுப்பது, டேட்டா மாஸ்கிங் செய்வது, அதிக கமிஷன் வாங்குவது போன்றவைகளை குறைகளாகச் சொன்னார்கள். அதில் இருந்து சொமாட்டோ இப்போதும் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.
கணிப்பு
இந்தியாவில் உணவுத் துறை ஒரு பக்கம் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த 2018 - 19 ஆண்டுகளில் இந்தியாவின் உணவு சேவைத் துறை சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வரும் 2021-ம் ஆண்டுக்குள் இந்த உணவுத் துறை சுமாராக 5.5 லட்சம் கோடி ரூபாயாக வளரும் என கணித்து இருக்கிறார்கள்.
வியாபாரம்
இவ்வளவு பெரிய வியாபார சந்தையை, அனைவரும் ஒற்றுமையாக இருந்து, விட்டுக் கொடுத்து வியாபாரம் செய்தால் எல்லோரும் பிழைக்கலாம். முரண்டு பிடித்தால்... யாருக்கு நஷ்டம் என சொல்ல வேண்டுமா என்ன..? இனியாவது சொமாட்டோ பாடம் கற்கும் என நம்புவோம். உணவகங்களின் வியாபாரம் பெருகட்டும்... ஸ்டார்ட் அப்கள் வளரட்டும்.