உபர் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் விமான நிலையத்திலிருந்து வீடு வரை 45 கிலோமீட்டர் செல்வதற்கு ரூ.3000 தன்னிடம் கட்டணம் வசூலிப்பதாக டெல்லியை சேர்ந்த நபரொருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணை செய்து 10 நாட்களுக்குள் பணத்தை திரும்ப ஒப்படைக்க முயற்சிக்கிறோம் என்று உபர் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் தெரிவித்திருந்தும் இப்போது வரை தனக்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
45 கிமீ பயணம்
சமீபத்தில் டெல்லி என்சிஆர் குடியிருப்பாளர் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு செல்ல உபர் வண்டியை பயன்படுத்தினார். அவர் வீடு வந்து சேர்ந்தவுடன் அவருக்கான பில் தொகையை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
45 கிமீக்கு ரூ.2935
விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வெறும் 45 கிலோமீட்டர் மட்டுமே என்று இருக்கும் நிலையில் உபர் பில்லில் 147.39 கிலோ மீட்டர் பயணம் செய்ததாக பதிவு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் ரூபாய் 2,935 என காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உபர் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தபோதிலும் வேறு வழியின்றி அந்த பணத்தை தான் கட்டியதாகவும் 45 கிலோமீட்டருக்கு கிட்டத்தட்ட 3000 ரூபாய் என்பது மிகவும் மோசமான ஒரு கட்டணம் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கஸ்டமர்கேரிடம் புகார்
டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு 45 கிலோ மீட்டர் பயணம் செய்ய 2,935 ரூபாய் கட்டணம் செலுத்தியதாகவும், என்னிடம் 147.39 கிலோமீட்டர் பயணம் செய்ததாக பில் இருக்கிறது என்றும் தான் உபர் கஸ்டமர் கேரிடம் புகார் அளித்தேன் அவர் கூறியுள்ளார்.
கஸ்டமர் கேர் பதில்
தன்னிடம் பெற்ற அதிகப்படியான தொகையை திருப்பி தரவேண்டும் என்று தான் புகார் அளித்த நிலையில், அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உபர் நிர்வாகிகள் கூறியதாகவும், ஆனால் அதே நேரத்தில் தான் புகார் அளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் உபர் கஸ்டமர்கேரிடம் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்கள் ரியாக்சன்
இந்த ட்விட்டுக்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர் இதே போல் என்னிடமும் ஒருமுறை வசூல் செய்தார்கள் என்றும் வெறும் 3.5 கிலோமீட்டர் பயணம் செய்ததற்கு என்னிடம் 1500 ரூபாய் பணத்தை வசூலித்தார்கள் என்றும் நான் வேறு வழியில்லாமல் அந்த பணத்தை செலுத்த வேண்டியிருந்தது என்றும் அதன்பின்னர் புகார் தெரிவித்த பின்னர் கூடுதலாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்தார்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.
50 கிமீக்கு ரூ.3000
இதேபோல் மும்பையைச் சேர்ந்த ஒருவர் 50 கிலோமீட்டர் பயணத்திற்கு 3000 ரூபாய் தான் கட்டணம் செலுத்தியதாகவும், அந்த பணத்தில் நான் மும்பையிலிருந்து கோவாவுக்கே சென்று இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் கருத்து
உபர் நிறுவனம் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெற வேண்டுமானால் இதுபோன்ற தவறுகள் நிகழாமல், நியாயமான கட்டணத்தை பெற வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.