டெல்லி: நாடு முழுவதும் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் மானியமில்லாத சிலிண்டரின் விலையினை 147 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளன.
கடந்த சில மாதங்களில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்வு செய்யப்பட்ட நிலையில், இது ஆறாவது முறையாகும். கடைசியாக கடந்த ஜனவரி 1ம் தேதியன்று மானியமில்லாத சிலிண்டரின் விலையை 19 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.
சிலிண்டர் விலை அதிகரிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கொண்டு தொடர்ந்து ஆறாவது மாதமாக விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது சாமானியர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 30 லட்சம் சிலிண்டர்களை வழங்கும் அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் அறிக்கையின் படி, டெல்லியில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ஜனவரி 1 அன்று 714 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 858.5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்னையில் விலை எப்படி?
சென்னையில் கடந்த மாதம் முழுவதும் மானியமில்லா சிலிண்டர் விலை 734 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் 147 ரூபாய் உயர்த்தப்பட்டு 881 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மற்ற இடங்களில் மானியமில்லா சிலிண்டர் விலை
மானியமில்லா சிலிண்டர் விலை டெல்லியில் 858.5 ரூபாயாகவும் (144 ரூபாய் அதிகரிப்பு), இதே கொல்கத்தாவில் 896 ரூபாயாகவும் (149 ரூபாய் அதிகரிப்பு), இதே மும்பையில் 829.5 ரூபாய்க்கும் (145.5 ரூபாய் அதிகரிப்பு), சென்னையில் 881 ரூபாயாகவும் (147 ரூபாய் அதிகரிப்பு) அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வங்கிக் கணக்கில் மானியம்
ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மானியத் தொகை நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டும் வருகிறது.
மானியம் இல்லாத வகையில் சிலிண்டர்
ஆனால் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்தினால் மானியம் இல்லாத விலையில், சமையல் கியாஸ் சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கேஸ் சிலிண்டரின் விலையை மாதம் ஒரு முறை எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.