அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், நாடு முழுவதும் நவம்பர் 19 அன்று வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
வங்கி நிர்வாகங்கள் ஊழியர்கள் சங்கத்தில் பணியாற்றியதற்காக வங்கியாளர்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து AIBEA பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், சமீப காலமாக வங்கி ஊழியர்கள் தாக்குதல்கள் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் இந்தத் தாக்குதல்கள் அனைத்திலும் பொதுவான ஒரு காரணம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
வங்கி நிர்வாகத்திற்கு எதிராகவும், வங்கி ஊழியர்களுக்குச் சாதகமாகவும் வங்கி ஊழியர்கள் சங்கத்தில் செயலாற்றியதற்காக வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் நவம்பர் 19 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
வங்கி ஊழியர்கள் மீதான தாக்குதல்களில் ஒரு வடிவமைப்பு இருப்பதை நாங்க பார்க்கிறோம். எனவே ஒட்டுமொத்தமாக AIBEA அமைப்பின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வங்கி ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல்களை நாம் எதிர்க்க வேண்டும், பதிலடி கொடுக்க வேண்டும், முறியடிக்க வேண்டும் என்று வெங்கடாசலம் AIBEA அமைப்பின் உறுப்பினர்களிடம் கூறினார்.
AIBEA தொழிற்சங்கத் தலைவர்கள் சோனாலி வங்கி, MUFG வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவற்றால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்/சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
பாங்க் ஆப் மகாராஷ்டிரா போன்ற அரசு வங்கிகள் தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள் பல வங்கி பணிகளை அவுட்சோர்சிங் செய்வதாகவும் வெங்கடாசலம் கூறினார்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் கண்மூடித்தனமான ஊழியர்களை இடமாற்றம் செய்வதால் 'ஜங்கிள் ராஜ்' எனக் குறிப்பிடுகிறார் வெங்கடாசலம். மேலும் அவர் கூறுகையில், இருதரப்புத் தீர்வு மற்றும் வங்கி அளவிலான தீர்வை மீறி 3,300க்கும் மேற்பட்ட கிளார்க் ஊழியர்கள் ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.