உள்ளூர் விமான பயணமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு விமான பயணமாக இருந்தாலும் சரி, விமான நிலையத்தில் சோதனை என்பது உண்மையாகவே சோதனையாக இருக்கும்.
மணிக்கணக்கில் விமான பயணிகள் சோதனையிடப்படுவது என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம்.
இந்த நிலையில் டிஜியாத்ரா என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த செயலியை பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் அனைத்து சோதனைகளும் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜியாத்ரா செயலி
ஏற்கனவே வாரணாசி உள்ளிட்ட ஒரு சில விமான நிலையங்களில் டிஜியாத்ரா என்ற செயலின் மூலம் பயணிகளை ஒருசில நிமிடங்களில் சோதனை செய்யும் நடைமுறை அமலில் உள்ள நிலையில் தற்போது டெல்லி விமான நிலையத்தில் டிஜியாத்ரா முறையின் மூலம் பயணிகளை அனுமதிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.
டெல்லி விமான நிலையம்
டிஜியாத்ரா செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் விமான பயணிகள் எளிய முறையில் சோதனை செய்யப்பட்டு டெல்லி டெர்மினல் மூன்றிலிருந்து எந்த உள்நாட்டு பயணிகளும் தடையற்ற விமான பயண அனுபவத்தை பெறலாம். இந்த செயலி மூலம் விரைவாக அனைத்து சோதனைகளையும் விமான நிலைய அதிகாரிகள் முடித்துவிடலாம்.
பீட்டா பதிப்பு
டிஜியாத்ரா செயலியின் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில் விரைவில் நார்மல் பதிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜியாத்ரா செயலி என்பது ஒரு பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயக்கப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த செயலியை பயன்படுத்துவதால் பயணிகளுக்கு காகிதமற்ற மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஷியல் ரிகக்னேஷன்
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் விமான நிலையத்திற்குள் நுழைவது, பாதுகாப்பு சோதனைகள் செய்வது, விமானம் ஏறும்போது மற்றும் அனைத்து சோதனை நிலையங்களிலும் ஃபேஷியல் ரிகக்னேஷன் என்று கூறப்படும் முக அங்கீகாரம் அமைப்பின் அடிப்படையில் பயணிகள் நுழைய வழி வகுக்கப்படும். ஒவ்வொரு பயணிக்கும் மூன்று வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இந்த சோதனை செய்து முடிக்கப்படும்.
போர்டிங் பாஸ்
டிஜியாத்ரா செயலி தொழில்நுட்பத்தின் மூலம் சோதனை விரைவாக செய்து முடிக்கப்படுவது மட்டுமின்றி, பயணிகளின் அடையாள சான்று, தடுப்பூசி சான்றிதழ், ஆதார் அட்டை போன்ற அரசு சான்று ஆவணங்களை ஒரு சில நொடிகளில் செய்து முடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிஜியாத்ரா செயலியை போர்டிங் பாஸ் ஆகவும் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பு
விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் பயணிகள் இந்த செயலியின் மூலம் சரி பார்க்கப்படுவதால் விமான நிலையத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதன் மூலம் உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்குள் நுழைய முடியும் என்பதால் தீவிரவாதம் முழுமையாக தடுக்கப்படும்.
20,000 பயணிகள்
ஏற்கனவே வாரணாசி உள்ளிட்ட ஒரு சில விமான நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது டெல்லி விமான நிலையத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சோதனை முறையில் இந்த செயலியில் அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இந்த வசதி முழுமையாக பயன்படுத்தப்பட்டால் தினமும் 20 ஆயிரம் பயணிகள் தடையற்ற, எளிதான, பாதுகாப்பான பயண அனுபவத்தை பெறமுடியும் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் இயங்குதளம்
தற்போது ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு மட்டும் டிஜியாத்ரா பயன்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் ஐபோன் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.