இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சேவை மற்றும் பயன்பாட்டைப் பெரிய அளவில் மாற்றியது யூபிஐ தான். இன்று இந்தியாவின் பெரும் நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரையில் யூபிஐ வாயிலான பேமெண்ட் சேவை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கும் சரி, மக்களுக்கும் சரி பல நன்மைகள் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் யூபிஐ தளத்தை ஐக்கிய அரபு நாடுகளிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக வெளிநாட்டுச் சேவைகள் தான் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும், ஆனால் தற்போது இந்தியாவின் சேவை உலக நாடுகளுக்குச் செல்கிறது.
யூபிஐ பேமெண்ட் தளம்
யூபிஐ பேமெண்ட் தளத்தை உருவாக்கிய நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் இந்தியா (NPCI) அமைப்பின் சர்வதேச கிளை நிறுவனமான NIPL உடன் குளோபல் டிஜிட்டல் காமர்ஸ் எனேப்ளரான நெட்வொர்க் இண்டர்நேஷனல் உடன் யூபிஐ தளத்தை ஐக்கிய அரபு நாடுகளில் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
NIPL மற்றும் நெட்வொர்க் இண்டர்நேஷனல்
NIPL மற்றும் நெட்வொர்க் இண்டர்நேஷனல் மத்தியிலான இந்த ஒப்பந்தம் மூலம் யூபிஐ சேவையை இனி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலும் விரிவாக்கம் செய்ய உள்ளது. இதில் ஐக்கிய அரபு நாடுகளில் 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த மொபைல் பேமெண்ட் தளத்தை அறிமுகம் செய்யப்போகிறது.
ஐக்கிய அரபு நாடுகள்
இதன் மூலம் 2022 மார்ச் மாதத்திற்குப் பின் ஐக்கிய அரபு நாடுகளில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் அதைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் அனைத்து நகைக்கடைகள், சூப்பர் மார்கெட் மற்றும் duty free ரிடைல் கடைகளிலும் யூபிஐ மூலம் பணத்தை அனுப்ப முடியும்.
ரியல் டைம் பேமெண்ட்
உலகிலேயே ரியல் டைம் பேமெண்ட் பிரிவில் மிகவும் வெற்றிகரமாக விளங்கும் ஒரு பேமெண்ட் தளம் என்றால் அது யூபிஐ தான். Unified Payments Interface என்பதன் சுருக்கம் தான் UPI இது மிகவும் எளிமையான கட்டமைப்புடன், பாதுகாப்புடனும் இயங்குகிறது. மேலும் வாடிக்கையாளர் மத்தியிலான பேமெண்ட்-க்கும் சரி, வாடிக்கையாளர் - விற்பனையாளர் மத்தியிலான பேமெண்ட்-க்கும் சரி எவ்விதமான தொய்வும் இன்றி மிகவும் இயங்கி வருகிறது.
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு
இனி வரும் காலகட்டத்தில் இந்தியாவில் உருவான யூபிஐ உலக நாடுகளுக்குச் செல்லும் பட்சத்தில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்பாடு பெரிய அளவில் குறையும். இதுமட்டும் அல்லாமல் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவதற்கும், பெறுவதற்குமான கட்டணத்தையும் மக்கள், வங்கிகள் செலுத்த தேவையில்லை.