என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணா சுமார் 20 வருடமாகப் பங்குச்சந்தையில் பல்வேறு ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை முகம் தெரியாத இமயமலை சாமியாரிடம் பகிர்ந்து வந்தது முதலீடு சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை முதலில் செபி மட்டுமே விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது வருமான வரித் துறை, சிபிஐ எனப் பல துறை கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் NSE சித்ரா ராமகிருஷ்ணா-வை கட்டுப்படுத்திய இமயமலை சாமியார் யார் என்பதைச் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனந்த் சுப்ரமணியன் கைது
என்எஸ்ஈ சித்ரா வழக்கில் முக்கியமான குற்றவாளியாகக் கருதப்படும் தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியன் சிபிஐ பிப்ரவரி 25ஆம் தேதி, சில குறிப்பிட்ட வர்த்தகர்களுக்கு முறைகேடாக என்எஸ்இ தளத்தில் இருக்கும் நெட்வொர்க் ஆக்சிஸ் நியாயமற்ற முறையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ தகவல்
இந்நிலையில் சிபிஐ தரப்பில் இருந்து வெளியான தகவல்கள் படி, பிப்ரவரி 25ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆனந்த் சுப்ரமணியனிடம் செய்யப்பட்ட பல நாள் விசாரணையில், சித்ரா ராமகிருஷ்ணா மின்னஞ்சல் மூலம் பேசி வந்த முகம் தெரியாத இமயமலை சாமியாராக அறியப்படுவது ஆனந்த் சுப்ரமணியன் தான் எனச் சிஎன்பிசி தெரிவித்துள்ளது.
முக்கியத் தகவல்
ஏற்கனவே செபி மற்றும் EY செய்த ஆய்வில் ஆனந்த் சுப்ரமணியனின் என்எஸ்ஈ கம்பியூட்டரில் "anand.subramanian9" மற்றும் "sironmani.10" என்ற இரு ஸ்கைப் ஐடி இருந்துள்ளது. இந்த ஸ்கைப் முகவரி rigyajursama@outlook.com மற்றும் ஆனந்த் சுப்ரமணியனின் மொபைல் எண் உடன் இணைக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சித்ரா ராமகிருஷ்ணா
இந்தச் சிபிஐ விசாரணையில் ஆனந்த் சுப்ரமணியனின் rigyajursama@outlook.com என்ற ஈமெயில் முகவரியை உருவாக்கி, சித்ரா ராமகிருஷ்ணா-வின் பர்சனல் ஈமெயில் முகவரியான rchitra@icloud.com மூலம் என்எஸ்ஈ குறித்துப் பல முக்கியத் தரவுகளைப் பெற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.
2018 வழக்கு
2018ல் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குத் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பெயரில் கடந்த 15 நாட்களாகச் சிபிஐ இந்த வழக்கின் விசாரணையைக் கையில் எடுத்துள்ளது.