இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் இந்திய சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் திக்குமுக்காடிய ஒரு விஷயத்தை தேசிய பங்குச்சந்தை இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் செய்துள்ளார்.
20 ஆண்டுகளாக இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் தேசிய பங்குச்சந்தை குறித்த பல்வேறு ரகசிய தரவுகளைப் பகிர்ந்துள்ளது கண்டுப்பிடக்கப்பட்டுச் செபி அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி யார் இந்தச் சாமியார்..?! இவர் சித்ரா ராமகிருஷ்ணன் வாயிலாக என்ன செய்தார்..?! என்பது தான்.
சித்ரா ராமகிருஷ்ணா
தேசிய பங்குச்சந்தை போன்று மிக முக்கியமான இடத்தில், குறிப்பாக மக்களின் பணம் அதிகம் புழக்கத்தில் இருக்கும் இடங்களில் இருப்பவர்கள் அதிகப்படியான கவனத்துடனும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் ஆனால் உண்மையில் இத்தகைய பதவிகளில் இருக்கும் பலர் அப்படி இருப்பது இல்லை என்பதற்கு முக்கிய உதாரணமாக விளங்குகிறார் தேசிய பங்குச்சந்தை முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா.
20 வருட ஈமெயில் பரிமாற்றம்
சித்ரா ராமகிருஷ்ணா சுமார் 20 வருடங்களாக முகம் தெரியாத ஒரு இமயமலை சாமியார் ஒருவருக்கு ஈமெயில் மூலம் பல்வேறு முக்கியமான தரவுகளைப் பகிர்ந்து, அவர் கூறும் முடிவுகளை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிறைவேற்றி வந்துள்ளது, செபி அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இமயமலை சாமியார் சிரோன்மணி
என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் தலைவராகச் சித்ரா ராமகிருஷ்ணா குறிப்பிடும் அந்த முகம் தெரியாத இமயமலை சாமியாரின் பெயர் "சிரோன்மணி" எனத் தெரிகிறது. சிரோன்மணி-யிடம் சித்ரா ராமகிருஷ்ணா NSEயின் ஐந்தாண்டுக் கணிப்புகள், நிதித் தரவு, ஈவுத்தொகை விகிதம், வணிகத் திட்டங்கள், வாரிய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் போன்ற அனைத்து முக்கியமான மற்றும் ரகசியம் காக்க வேண்டிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சம்பள உயர்வு, பதவி உயர்வு
இதுமட்டும் அல்லாமல் என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் தலைவராகச் சித்ரா ராமகிருஷ்ணா இருந்த போது தனக்குக் கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும், யாருக்குப் பதவி உயர்வு அளிக்க வேண்டும், யாரை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது போன்ற அனைத்து முடிவுகளையும் சிரோன்மணி கட்டளையிட்டு சித்ரா ராமகிருஷ்ணா செய்துள்ளார்.
2016ல் வெளியேற்றம்
2016ல் இணை இருப்பிட பணி, அல்கோ வர்த்தக ஊழல், NSE-யின் தலைமை செயல் அதிகாரியாக ஆனந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டதில் செய்த அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் காரணம் காட்டி சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்குச்சந்தை பணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
செபி தொடுத்த வழக்கு
இதன் பின் செபி தொடுத்த வழக்கு விசாரணையின் முடிவுகள் தான் தற்போது நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் விசாரணையின் முடிவுகளில் சித்ரா ராமகிருஷ்ணா பதவியில் இருந்த காலகட்டத்தில் அவருடைய முடிவுக்கு உயர் அதிகாரிகள், நிர்வாகம், அரசு, வங்கி என யாரும் எவ்விதமான மறுப்பு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
சிரோன்மணி ஆதிக்கம்
சித்ரா ராமகிருஷ்ணா குறிப்பிடும் இந்த முகம் தெரியாத இமயமலை சாமியாரின் பெயர் "சிரோன்மணி"-க்கு NSE அமைப்பில் இருக்கும் அனைத்து மட்ட அதிகாரிகள், அவர்களின் பணி என்ன, ஆதிக்கம் என்ன என்பது முதல் டெல்லி அரசியல் வட்டங்கள், முக்கியத் துறை அதிகாரிகள் வரையில் நெட்வொர்க் இருந்தது இந்த விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனந்த் சுப்ரமணியன் நியமனம்
இந்தச் சிரோன்மணி-யின் உத்தரவின் பெயரில் தான் சித்ரா ராமகிருஷ்ணா, பால்மர் லாரி நிறுவனத்தில் வெறும் 15 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த ஆனந்த் சுப்ரமணியன்-ஐ ஜனவரி 18, 2013ல் 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் NSE-யின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தார்.
ஆனந்த் சுப்ரமணியன் சம்பள உயர்வு
மார்ச் 2014ல் ஆனந்த் சுப்ரமணியன்-க்கு 20 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு 2.01 சம்பளம் அளிக்கப்பட்டது. வெறும் 5 வார இடைவெளியில் A+ பர்பாமென்ஸ் எனக் கணக்கு காட்டி 15 சதவீத கூடுதல் சம்பளம் உடன் 2.31 கோடி ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டது.
5 கோடி ரூபாய்
2015ல் ஆனந்த் சுப்ரமணியன்-க்கு அலுவலகத்தில் சித்ரா ராமகிருஷ்ணா-க்குப் பக்கத்தில் அறை, முதல் வகுப்பு விமானப் பயணம் எனப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டது. அவை அனைத்தும் சிரோன்மணி-யின் உத்தரவின் படி சித்ரா ராமகிருஷ்ணா கொடுத்துள்ளார். இதன் மூலம் 2015ஆம் ஆண்டில் ஆனந்த் சுப்ரமணியனின் CTC 5 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
3 நாள் மட்டுமே வேலை
இது மட்டும் அல்லாமல் NSE அமைப்பின் அனைத்து ஊழியர்களும் வாரத்தில் 5 நாள் பணியாற்றும் நிலையில் ஆனந்த் சுப்ரமணியன்-க்கு மட்டும் 3 நாள் மட்டும் பணியாற்ற அனுமதி அளித்து முழுச் சம்பளமும் அளிக்கப்பட்டு உள்ளது.
பதவி உயர்வு
இதோடு NSE நிறுவனத்தில் 2015ஆம் ஆண்டும் சிரோன்மணி-யின் உத்தரவின் படி சித்ரா ராமகிருஷ்ணா பலரை முக்கியமான பதவி உயர்வுகளைக் கொடுத்துள்ளார். இதில் குறிப்பாகக் கன்சன், நிஷா, மயூர், ஹூசான், ரவி வாரனாசி, நாகேந்திரா, ஹரி, ஆகியோருக்கும் தனித்தனி பிரிவுகளில் உயர் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்றும், கசம் என்பரவை ஒதுக்க வேண்டும் என்றும் ஈமெயில் முலம் சித்ரா ராமகிருஷ்ணா-க்கு உத்தரவு வந்துள்ளதை செபி கண்டுபிடித்துள்ளது.
டெல்லி
இதேபோல் டெல்லியில் சித்ரா ராமகிருஷ்ணா-வின் பதவியின் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி NSE-ஐ பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும், அதற்கான சக்தி தான் அளிப்பதாகவும் சில முக்கிய அதிகாரிகளைச் சந்திக்கவும் சிரோன்மணி கூறியுள்ளார்.
இன்ப சுற்றுலா முதல் ஹேர் ஸ்டைல் வரை
இப்படி நிர்வாக ரீதியான மாற்றங்கள், அரசியல் தொடர்புகள் வரையில் பல்வேறு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ள சிரோன்மணி, சித்ரா ராமகிருஷ்ணா தனிப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். சித்ரா ராமகிருஷ்ணா-ஐ தனியாகச் சீஷெல்ஸ்-க்கு சுற்றுலாவுக்கு அழைத்து முதல், ஹேர் ஸ்டைல்-ஐ மாற்ற வேண்டும் என்பது வரையில் விவாதித்து உள்ளனர்.