தேசிய பங்குச்சந்தை அமைப்பு அதானி குழுமத்தின் 3 நிறுவன பங்குகளைக் கூடுதல் கண்காணிப்பில் வைத்துள்ளது. வியாழக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகள் அதானி குழுமத்திற்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதற்கான விபரங்களைச் சமர்ப்பிக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது தேசிய பங்குச்சந்தை அமைப்பு அதானி குழும நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்த குறுகிய காலக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் சேர்த்துள்ளது.
இந்த ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரத்தின் கடைசி நாளான இன்றும் அதானி குழுமத்தின் பல பங்குகள் சரிவுடனே வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
தேசிய பங்குச்சந்தை அமைப்பு
தேசிய பங்குச்சந்தை அமைப்பு அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்த குறுகிய காலக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் சேர்த்துள்ளது.
மார்ஜின் அளவு
இந்தக் கட்டமைப்புக் கீழ் மார்ஜின் அளவில் 50 சதவீதம் அல்லது தற்போது இருக்கும் மார்ஜின் அளவு இதில் எது குறைவாக இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசிய பங்குச்சந்தை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதகமான நடவடிக்கை இல்லை
இந்தக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் உள்ள பத்திரங்களின் ஷாட்லிஸ்டிங் முற்றிலும் சந்தைக் கண்காணிப்பு காரணமாக்க மட்டுமே, மேலும் இது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிரான பாதகமான நடவடிக்கையாகக் கருதப்படக்கூடாது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது தேசிய பங்குச்சந்தை அமைப்பு.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
ஷார்ட் செல்லர் மற்றும் நிதி முறைகேடுகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் ஷார்ட் பொசிஷன் எடுத்து முதலீடு செய்யும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின், அதானி குழுமம் மீதான மோசடி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சர்வதேச வங்கிகள் அதானி குழுமத்தின் நிதிகளை ஆய்வு செய்யத் தொடங்கியது.
Citigroup, கிரெடிட் சூசி
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் பல்வேறு நிதி சேவைகளை அளித்து வரும் Citigroup நிறுவனத்தின் வெல்த் பிரிவும், சுவிஸ் நிதி நிறுவனமான கிரெடிட் சூசி நிறுவனமும் மார்ஜின் கடன்களுக்குக் கௌதம் அதானியின் குழும நிறுவனங்களின் பத்திரங்களைப் பிணையமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது கூடுதல் அதிர்ச்சி தகவல் ஆகும். ஓரே நாளில் 2 நிதி நிறுவனங்கள் இதே முடிவை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இதேவேளையில் தான் ரிசர்வ் வங்கி இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து உள்நாட்டு வங்கிகளிடம் அதானி குழும நிறுவனங்களிடம் இருக்கும் கடன் வெளிப்பாடு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளதாகவும், விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதானி நிறுவனத்தில் உள்ள நிறுவனங்களுக்கு 2.6 பில்லியன் டாலர் அளவிலான கடனை வழங்கியுள்ளது. இதோடு எஸ்பிஐ வங்கியின் வெளிநாட்டு வங்கி கிளைகள் வாயிலாக அதானி குழும நிறுவனங்களுக்குச் சுமார் 200 மில்லியன் டாலர்கள் அளவிலான கடனை கொடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
இதேபோல் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதானி குழு நிறுவனங்களுக்குச் சுமார் 7000 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடனாகக் கொடுத்துள்ளது. இதில் பெரும் பகுதி தொகை அதானி ஏர்போர்ட் வர்த்தகத்திற்கு மட்டும் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.