சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நடக்கும் விலை போரின் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எப்போதும் இல்லாத வகையில்ல குறைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை கடந்த 18 வருடங்களில் இல்லாத அளவிற்குக் குறைந்து கச்சா எண்ணெய் முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 22.58 டாலர் என்ற விலையை அடைந்து 2002 நவம்பர் மாதத்திற்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல் WTI கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் குறைவான விலையைப் பதிவு செய்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை இந்த அளவிற்குச் சரிய என்ன தான் காரணம்..? வாங்கப் பார்ப்போம்.
கோல்டுமேன் சாச்சஸ்
கச்சா எண்ணெய் சந்தை குறித்துக் கோல்டுமேன் சாச்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய சரிவை எதிர்கொள்ளும்.
மேலும் தற்போது நிலவும் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சூழ்நிலை தொடர்ந்து நிலவினால் கண்டிப்பாகக் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 20 டாலர் என்கிற மோசமான நிலையை அடையும்.
அமெரிக்கா
கடந்த 15 வருடத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, இதன் முலம் அதிகளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற்று வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா பல வளரும் நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது.
பிரச்சனை
அமெரிக்காவின் வர்த்தக வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரஷ்யா, அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பிற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அரபு நாடுகள் கச்சா எண்ணெய் விலையைக் குறைத்து ரஷ்ய வர்த்தகத்தை வீழ்த்த உற்பத்தியை அதிகரித்தது.
ஆனால் இப்போது எல்லோருக்கும் பெரிய அளவிலான வருமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதித்தது, அமெரிக்கா தான் என்றால் மிகையில்லை.
உலகப் பொருளாதாரத்திற்கு இதுதான் நல்லது
தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பதற்றம், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் சரிவுகள் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை தற்போது உலக நாடுகளைப் பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது நல்லது தான்.
உலகில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் வரையிலும் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் நன்மை தான் எனக் கிரிசில் அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய பிரச்சனை
ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசல்-இன் தேவை அதிகளவில் குறைந்து, வர்த்தகம் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை ஆகாமல் கச்சா எண்ணெய் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் கூடுதலாகக் கச்சா எண்ணெய் வாங்கிச் சேமித்து வைக்க இடம் கூட இல்லாத நிலை உலக நாடுகள் ஏற்பட உள்ளது.
இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது என்றால் மிகையில்லை.