இந்தியாவில் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள் மிகச் சிறந்த முறையில் கேப் சேவையை செய்து வரும் நிலையில், இந்த இரு நிறுவனங்களும் இணைய வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் அவர்கள் சமீபத்தில் அமெரிக்காவில் உபேர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் ஓலா, உபெர் நிறுவனத்தின் இணைப்பு என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும் அதற்கான தேவை இப்போது இல்லை என்றும் பவிஷ் அகர்வால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஓலா - உபெர் இணைப்பு?
ஓலா மற்றும் உபெர் கேப் சர்வீஸ் துறையில் போட்டியிடும் நிலையில் இந்த இரு நிறுவனங்கள் இணைப்புக்கான பேச்சுவார்த்தையில் உள்ளன என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் ஓலா இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பவிஷ் அகர்வால் சமீபத்தில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உபெர் உயர் அதிகாரிகளை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.
பவிஷ் அகர்வால் மறுப்பு
ஆனால் ஓலா சி.இ.ஓ பவிஷ் அகர்வால் நேற்று ட்விட்டரில், 'ஓலா, உபெர் இணைப்பு குறித்த எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறினார். இந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என்றும், நாங்கள் மிகவும் லாபகரமாக இயங்கி வருகிறோம் என்றும், நன்றாக வளர்ந்து வருகிறோம் என்றும், ஒருசில நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை இந்தியாவில் முடித்து கொள்ள விரும்பினால் நாங்கள் அதை வரவேற்போம் என்றும், நாங்கள் ஒருபோதும் இணைய மாட்டோம்' என்று தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மசயோஷி சன் தலைமையிலான சாப்ட்பேங்க் இரு நிறுவனங்களின் பொதுவான முதலீட்டாளர் என்பதால், இரு நிறுவனங்களும் இணைவது குறித்த பேச்சுவார்த்தையை நடத்தியதாகவும், ஆனால் இணைப்பு குறித்து எந்தவித ஒப்பந்தம் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஓலா செய்தி தொடர்பாளர்
இதுகுறித்து ஓலா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'எங்கள் நிறுவனம் வலுவான இருப்புநிலை கொண்டுள்ளது. உலகின் மிகவும் இலாபகரமான கேப் சர்வீஸ் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளோம். நாங்கள் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கின்றோம். மற்ற கேப் நிறுவனங்களை விட நாங்கள் மிகவும் வலிமையானவர்கள். எனவே, எந்த வகையான இணைப்பும் இப்போதைக்கு சாத்தியமில்லை' என்று கூறினார்.
ஓலா எலக்ட்ரிக் பைக் மற்றும் கார்
ஆனால் அதே நேரத்தில் ஓலா தற்போது எலக்ட்ரிக் பைக், எலக்ட்ரிக் கார் தயாரிப்பு அதற்கான பேட்டரி தயாரிப்பில் மும்முரமாக இருப்பதால் உபெர் நிறுவனத்துடனான இணைப்பு குறித்து பரிசீலனை செய்யும் என்றும் இதில் ஏதேனும் அதிசயம் நிகழலாம் என்றும் தொழில்துறை விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications