இந்தியா எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பையும், பயன்பாட்டையும் அதிகளவில் ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் சிறிதும் பெரிதுமாகச் சில எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் இருந்தாலும், பிரத்தியேகமாக இதற்கான தொழிற்சாலை இல்லை.
இந்த இடைவெளியைக் குறிவைத்துத் தான் ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு தொழிற்சாலையைப் படுவேகமாகக் கட்டி வருகிறது.
ஓலா நிறுவனம்
ஓலா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இணையாக உற்பத்தி திறன் மற்றும் தொழிற்சாலையைக் கட்டமைக்க வேண்டும் என்ற மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இத்தொழிற்சாலையைக் கட்ட தற்போது புதிய கடனை பெற்றுள்ளது ஓலா.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மாபெரும் தொழிற்சாலையின் முதல் கட்ட பணிகளுக்காக 10 ஆண்டுக் கடன் திட்டம் வாயிலாகப் பாங்க் ஆப் பரோடா வங்கியிடம் இருந்து சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான கடனை பெற ஒப்பந்தம் செய்துள்ளது.
2வது பெரிய இருசக்கரத் தொழிற்சாலை
உலகிலேயே 2வது பெரிய இருசக்கர வாகன தயாரிப்புத் தொழிற்சாலையாக உருவெடுக்கும் இந்த ஓலா எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை குறுகிய காலகட்டத்தில் கட்டி முடிக்கப்படத் திட்டமிட்டு உள்ளது. மேடு இன் இந்தியா எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவிற்கு மட்டும் அல்லாமல் உலகளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஓலா.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டும் இந்தத் தொழிற்சாலை மூலம் வருடத்திற்கு 1 கோடி வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பிரம்மாண்ட திட்டம் மூலம் தமிழ்நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
ஓலா தலைவர் - பாவிஷ் அகர்வால்
சமீபத்தில் ஓலா நிறுவனத்தின் தலைவரான பாவிஷ் அகர்வால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் ஓலா தொழிற்சாலை குறித்தும், அதன் வேகமான கட்டுமான பணிகள், உற்பத்தி இலக்குகள் குறித்தும் பேசியுள்ளார் பாவிஷ் அகர்வால்.


Click it and Unblock the Notifications