இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பிரதமர் மோடி இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அவரது நடவடிக்கை காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் தொகை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி இந்தியாவில் UPI பரிவர்த்தனையை ஏற்கனவே ஆறு நாடுகள் ஏற்றுக் கொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு நாடு UPI பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியாவாக மாறிவரும் இந்தியாவில் தற்போது பண பரிவர்த்தனை என்பது ஆன்லைனில் மிக எளிதாக உள்ளது என்பதும் குறிப்பாக UPI பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பாகவும் எளிமையாக இருப்பதால் ஏராளமான மக்கள் இதனை பயன்படுத்தி வருகிறார்கள்.
7வது நாடு
இந்த நிலையில் UPI பண பரிவர்த்தனையை ஏற்கனவே சிங்கப்பூர், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூட்டான், மலேசியா மற்றும் பிரான்ஸ் ஆகிய 6 நாடுகள் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது 7வது நாளாக ஓமன் நாடு UPI பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓமன் நாட்டில் UPI
ஓமன் மத்திய வங்கியின் செயல் தலைவர் தாஹிர் அல் அம்ரி அவர்கள் இது குறித்து கூறுகையில் UPI பண பரிவர்த்தனை ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்தியா மற்றும் ஓமன் உறவுகளில் இது ஒரு புதிய மைல்கல் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் முரளிதரன்
ஓமன் நாட்டில் UPI பணபரிவர்த்தனை தொடங்கியிருப்பதை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம்
வளைகுடா நாடுகளில் இந்திய டிஜிட்டல் சூழலை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது மேலும் ஒரு நாட்டில் UPI பரிவர்த்தனைக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் UPI இயங்குதளம் ஓமனில் இனி தங்கு தடையற்ற வகையில் பணப்பரிமாற்றம் செய்யப்படும்.
ரூபே கார்டுகள்
UPI மட்டுமின்றி இந்தியாவின் ரூபே கார்டுகளிம் இனி ஓமன் நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் இதனால் ஓமன் நாட்டில் உள்ள இந்திய தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு பயன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இரண்டு நாடுகள்
இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் இந்தியாவின் UPI பண பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ரஷ்யாவிலும் ஆஸ்திரேலியாவிலும் UPI பண பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.