டெல்லி: வெங்காயத்தை உரிக்காமலேயே இல்லதரசிகளின் கண்ணில் கண்ணீரை வரவைக்கிறது வெங்காயத்தின் விலை. குறிப்பாக சில மாநிலங்களில் தற்போது கிலோ வெங்காயத்தின் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது.
வெங்காயம் வரத்து குறைவால் இதன் விலை இப்படி தாறுமாறாக அதிகரித்திருப்பதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து அதிகரிக்கும் வெங்காய விலையை குறைக்க, அரசு இறக்குமதியில் சில சலுகைகளை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமையலறையில் முக்கிய பிரதானமான பொருளாக இருக்கும் வெங்காயத்தின் விலை, குடிசையில் வாழும் சாமனியர்கள் முதல் அனைத்து தரப்பினரின் பாக்கெட்டுகளையும் பதம் பார்க்கும் என்றாலும், குறிப்பாக இது சாமானிய மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இறக்குமதிக்கு சலுகை
வெங்காயத்தின் வரத்து குறைவாக இருப்பதால் தான் விலை அதிகரித்துள்ளது என்ற நிலையில், அரசு ஆப்கானிஸ்தான், எகிப்து துருக்கி மற்றும் ஈரானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இறக்குமதியை ஊக்குவிக்க அரசு சில சலுகைகளையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர மகாராஷ்டிரா மற்றும் தென் மாநிலங்களிலிருந்து, வட மாநிலங்களுக்கு சப்ளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார துறை ஆய்வு
இது தொடர்பாக நுகர்வோர் விவகார செயலாளர் அவினாஷ் கே. ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான கூட்டத்தில் இது சம்பந்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நாட்டில் வெங்காயத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை உள்ளிட்ட சிலவற்றை ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. பல நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெங்காய விலை உயர்வுக்கு கனமழையே காரணம்
மகாராஷ்டிரா போன்ற முக்கியமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தொடர்ந்து போதிய அளவிலான சப்ளை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனாலேயே ஒரு கட்டத்திற்கு மேல் சில மாநிலங்களில் வெங்காயத்தில் விலை தாறுமாறாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னையில் விலை எப்படி?
நுகர்வோர் அமைச்சகத்தின் அறிக்கையின் படி, டெல்லியில் வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை 80 ரூபாயாகவும், இதே சென்னை மற்றும் கொல்கத்தாவில் முறையே, 70 ரூபாய் மற்றும் 50 ரூபாயாக உள்ளது. எனினும் இது எதிர்வரும் நாட்களில் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இறக்குமதி செய்யப்படும் நிலையில், விலை ஏற்றம் குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
100 கன்டெய்னர்கள் வரை இறக்குமதி
இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயமானது இன்னும் சில நாட்களில் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 80 - 100 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்படலாம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது. மேலும் கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தும் நவம்பர் 6 - 7ம் தேதிகளில் நுகர்விற்கு ஏற்றாற்போல் வெங்காயம் டெல்லிக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு பொருட்களுக்கு முன்னுரிமை
இந்த நிலையில் உள்நாட்டு பொருட்களுக்கு முதல் உரிமை கொடுக்க அறிவுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிலையில் வெங்காயத்தின் சப்ளையை ஊக்கப்படுத்த ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கனவே சில பகுதிகளில் அறுவடை தொடங்கியுள்ளதாகவும், மேலும் விரைவாக சப்ளை செய்யுமாறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூர்மையான ஏற்றம்
கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் 50 - 90 ரூபாய் வரை இருந்த நிலையில், தற்போது கிலோ வெங்காயம் 100 ரூபாயை தொட்டுள்ளது. இதே மொத்த சந்தையில், கடந்த மூன்று மாதங்களில் வெங்காய விலை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விலைவாக சில்லறை வர்த்தகத்திலும் வெங்காயத்தின் விலை கூர்மையான ஏற்றத்தை கண்டது.
மழையால் பாதிப்பு
முக்கியமாக வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு சரியான மழையின்மையால் வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், பழைய வெங்காயத்தின் இருப்பும் குறைவாக இருந்தால், இது மேலும் விலையேற்றத்துக்கு வழிவகுத்தது என்றும் கூறப்படுகிறது. எப்படி எனினும் இன்னும் சில நாட்களில், அரசின் இந்த நடவடிக்கையால் விலையேற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.