கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதுமாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு விதித்த நிலையில் ஆன்லைன் ஆப்லைன் வர்த்தகச் சந்தைகள் முடங்கிய நிலையில் ஒரு துறை வர்த்தகம் மட்டும் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற்று அசத்தி வருகிறது.
ஆம், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த நவீன உலகில் வரன் தேடும் படலம் ஆன்லைனில் நடக்கும் காரணத்தால், லாக்டவுன் நேரத்தில் மொத்த குடும்பமும் வீட்டிலேயே இருக்கும் காரணத்தாலும் ஆன்லைன் மேட்ரிமோனி சேவைகள் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
ஊரடங்கு காலகட்டத்தில் திருமணம் நடைபெறும் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மேட்ரிமோனியில் வரன் தேடும் படலம் அதிகரித்துக் காணப்படுகிறது.
லாக்டவுன் கல்யாணம்
ஊரடங்கு காலத்தில் பல திருமணங்கள் நடைபெற்றதை நாம் பார்த்தோம், அழகாக வீட்டிலேயே மணப்பெண், மணமகன் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் முன்னின்று. எவ்விதமான ஆர்ப்பாட்டம், அமர்க்களமின்றி எளிமையான திருமணம் நடைபெற்றது.
பலருக்கு எதிர்பாராத விதமாக இக்காலகட்டத்தில் திருமணம் நடத்தத் தேதி குறிக்கப்பட்டாலும், சிலர் வீண் கல்யாண செலவுகளைக் குறைத்து அதைச் சேமிப்பாக மாற்றத் திட்டமிட்டே இந்த லாக்டவுன் காலத்தில் திருமணம் நடத்தியுள்ளனர்.
வர்த்தகம் பாதிப்பு
இப்படி வீட்டிலேயே திருமணம் நடைபெறும் காரணத்தால் திருமண நிகழ்ச்சிகளைச் சார்ந்துள்ள பல்வேறு வர்த்தகங்கள் அதாவது சமையல், அலங்காரம், புகைப்படம், கேட்டரிங், திருமண மண்டபங்கள் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மொத்த வருவாயும் வர்த்தகமும் குறைந்ததுள்ளது.
ஆனால் இதேவேளையில் ஆன்லைன் மேட்ரிமோனி தளங்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவிலான வர்த்தகத்தை இக்காலாண்டில் பெற்றுள்ளது.
மேட்ரிமோனி.காம்
திருமண வரன் பார்க்கும் தளமான மேட்ரிமோனி.காம் இணையதளம் கொரோனா பாதிக்கப்பட்ட லாக்டவுன் காலாண்டில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
வளர்ச்சி
மேட்ரிமோனி.காம் 2020ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் வரன் தேடும் சேவையில் 93 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. இது கடந்த காலாண்டை விடவும் 5.8 சதவீதம் அதிகம், அதேபோல் கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டை விடவும் 13 சதவீதம் அதிகம்.
ஆனால் திருமணச் சேவை வர்த்தகம் (சமையல், அலங்காரம், புகைப்படம், கேட்டரிங், திருமண மண்டபங்கள்) கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவாய் அளவுகளில் கடந்த காலாண்டை விடவும் 50 சதவீத குறைவான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
டிசம்பர் காலாண்டில் திருமணச் சேவை மூலம் மேட்ரிமோனி.காம் 2.2 கோடி ரூபாய் வருவாய் பெற்று இருந்த நிலையில், மார்ச் காலாண்டில் வெறும் 1.1 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே பெற்று இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டில் மார்ச் காலாண்டில் 3.9 கோடி ரூபாய் வருவாய் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பார்த் மேட்ரிமோனி
மேட்ரிமோனி.காம், பார்த் மேட்ரிமோனி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய வரன் தேடும் ஆன்லைன் தளத்தை இந்நிறுவனம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் ஆன்லைன் மேட்ரிமோனி தளம் மெட்ரோ நகரங்களைத் தாண்டி சிறுசிறு கிராமங்கள் வரையில் சென்றடைந்துள்ளது.
இதனால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்ச் காலாண்டில் பார்த் மேட்ரிமோனி நிறுவனம் 14.5 லட்ச இலவச வரன் விண்ணப்பங்களை இணைத்துள்ளது. இதேபோல் 1.83 லட்ச paid subscriptions-யும் இணைத்துள்ளது.
கொரோனா
பார்த் மேட்ரிமோனி கொரோனா பாதிப்பு இருந்தாலும் 2020ஆம் நிதியாண்டில் 13 சதவீத வருடாந்திர வளர்ச்சியும், புதிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டில் வர்த்தகப் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.