இந்தியாவின் முன்னணி ஹோட்டல் புக்கிங் சேவை நிறுவனமான OYO கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் ஊழியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஊழியர்களின் உடல்நலம் மட்டும் அல்லாமல் மனநிலையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவதை உணர்ந்து பல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது.
சமீபத்தில் ஜீரோதா நிறுவனம் 6 மணிக்கு மேல் எந்த ஊழியரும் பிற ஊழியர்களுக்கு வேலை தொடர்பான அழைப்பு, மெயில், குறுஞ்செய்தி ஆகியவற்றை அனுப்ப கூடாது என அறிவித்த நிலையில் தற்போது OYO மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
OYO நிறுவனம்
இன்று முதல் OYO நிறுவனத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தில் சிறிய மாற்றத்துடன் அதாவது புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுப் பிற நாட்களில் பணியாற்றும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
அளவில்லா விடுமுறை
இதேபோல் கொரோனா தொற்றுக் காரணமாகப் பலருக்குப் பல விதமான பாதிப்புகள் இருக்கும் நிலையில் ஊழியர்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், சம்பளத்தில் எவ்விதமான பிடித்தமும் செய்யப்பட மாட்டாது என OYO நிறுவனத்தின் தலைவரான ரிதேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அனுமதி தேவையில்லை, தகவல் மட்டும் போதும்
விடுமுறை எடுக்கும் போது யாரிடமும் அனுமதி பெறத் தேவை இல்லை, உங்கள் மேனேஜரிடம் தகவல் அளித்தால் மட்டும் போதுமானது. வர்த்தகப் பாதிப்பு, வேலை வாய்ப்பு, இலக்குகள் என எதைப் பற்றியும் Stress எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் ரிதேஷ் தெரிவித்துள்ளார்.
4 நாள் வேலை - தற்காலிகமானது
இந்த 4 நாள் வேலை நாள் வழக்கம் அடுத்த 4 வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும், ஜூன் மாதம் நிலைமையை ஆய்வு செய்து தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும். மேலும் அளவில்லா சம்பளத்துடன் விடுமுறை ஜூலை மாதம் வரையில் நடைமுறையில் இருக்கும் என ரிதேஷ் அகர்வால் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
ரிதேஷ் அகர்வால்
இதேபோல் ரிதேஷ் அவர்களும் இன்று தனது வேலையை விரைவாக முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இருக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள உறவினர்கள், நண்பர்களுடன் பேச முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மாதம் ஸ்விக்கி நிறுவனமும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.