டெல்லி: நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் பல துறைகளும் பெருத்த அடி வாங்கியுள்ளன. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது பணியினை இழந்துள்ளனர். அதிலும் விருந்தோம்பல் துறையிலும் கூட இந்த வீழ்ச்சி எதிரொலித்துள்ளது கவனிக்கதக்கது.
குருகிராமை அடிப்படையாகக் கொண்ட 24 வயதான இளம் தொழிலதிபரான ரித்தேஷ் அகர்வால் என்பவரால் நிறுவப்பட்டது தான் ஓயோ நிறுவனம்.
இந்த நிறுவனம் சுற்றுலா செல்பவர்களுக்கும் ஹோட்டல் ரூம் தேவைப்படுவோர்களுக்கும் பட்ஜெட் விலையில் ஹோட்டல் ரூம்களை புக் செய்யும் மிகப்பிரபலமான ஒரு ஸ்டார்டப் நிறுவனமானகும்.
விருந்தோம்பல் துறையில் பணி நீக்கம்
சாப்ட் பேங்கின் ஆதரவுடைய இந்த நிறுவனம் ஒயோ ஹோட்டல் இந்தியாவிலும் சீனாவிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் பலவேறு துறைகளில் பணி நீக்கம் இருந்து வந்த நிலையில், முதல் முறையாக விருந்தோம்பல் துறையில் பணி நீக்கம் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியளித்துள்ளது.
எத்தனை பேர் பணி நீக்கம்
இந்திய அளவில் மிகப்பெரிய அளவிலான ஸ்டார்டப் நிறுவனமான ஒயோ, அடுத்து வரும் மூன்று மாதங்களில் இந்த பணி நீக்கத்தினை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் படி 1800 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும், இதில் இந்தியாவில் 1200 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும், இதே 600 பேர் சீனாவில் பணி நீக்கம் செய்யலாம் என்றும் கருதப்படுகிறது.
சீரமைப்பு பணி
கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஜனவரி மாத முடிவுக்குள் 2,000 பேரை பணி நீக்கம் செய்யலாம் என்று ஓயே கூறி வந்தது. இதுவே அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது. இந்த நிறுவனம் செலவினை குறைக்கவும் நிறுவனத்தை சீரமைக்கவும் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளையும் அறிவிப்புகளையும் எடுத்து வருகிறது.
சீனாவில் இதே நிலை தான்
நாட்டின் முன்னணி விரும்தோம்பல் நிறுவனமான ஓயோ, நிலவி வரும் மந்த நிலையில் மனிதவள செலவுகளை மிச்சப்படுத்துவதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கையில் எடுக்க உள்ள நிலையில், சீனாவில் உள்ள 12,000 ஊழியர்களில் 5% ஊழியர்களை செயல்திறன் இல்லாததால் விடுவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் எத்தனை பேர்
இந்தியாவைப் பொறுத்த வரையிலும் 10,000 ஊழியர்கள் உள்ள நிலையில், 12% ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் ஓயோ திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பணி நீக்கத்தினை ஈடுகட்ட இந்த நிறுவனம், தற்போது சில செயல் முறைகளில் தொழில்நுட்பத்தை புகுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் இந்தியாவில் 1200 பேரை பணி நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிகரிக்கும் நஷ்டம்
ஓயோ நிறுவனம் கடந்த 2019ம் நிதியாண்டில் இதன் நிகர இழப்பு 2.384 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நஷ்டமானது முந்தைய ஆண்டை காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம் இயக்க செலவுகள் மற்றும் பணியாளர் செலவுகள் என்றும் கருதப்படுகிறது. இதில் குறிப்பாக பணியாளர் செலவு மட்டும் ஆறு மடங்கு அதிகரித்து 1,539 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே இயக்க செலவினங்களும் 6 மடங்கு அதிகரித்து 6,131 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியிருந்தது கவனிக்கதக்கது.