இந்தியாவின் முன்னனி ஆட்டோமொபைல் கம்பெனிகளில் ஒன்று தான் டிவிஎஸ் குழுமம். இந்த குழுமத்துக்கு டிவிஎஸ் ஸ்ரீசக்கரா என்கிற பெயரில், டயர்களைத் தயாரிக்கும் தனி வியாபாரம் உள்ளது.
இந்த டிவிஎஸ் ஸ்ரீசக்கரா கம்பெனி, இந்தியாவில் டயர் தயாரிக்கும் பெரிய கம்பெனிகளில் ஒன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மாதம் ஒன்றுக்கு 2.7 மில்லியன் டயர் மற்றும் டயர் டியூப்களைத் தயாரிப்பதாக டிவிஎஸ் ரப்பர் வலைதளமே பெருமையாகச் சொல்கிறது.
பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், ஹோண்டா மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், இந்தியா யமஹா மோட்டார்ஸ்... போன்ற பல முன்னனி கம்பெனிகள் கூட, டிவிஎஸ் ஸ்ரீசக்கராவில் இருந்து டயர்களை வாங்குகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இது போக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வேறு தனியாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு டிவிஎஸ் ஸ்ரீசக்கரா தன் வியாபாரத்தை வளர்த்து இருக்கிறது. வளர்த்துக் கொண்டு இருக்கிறது.
இப்படி டிவிஎஸ் ஸ்ரீசக்கரா வளர்ச்சி காண கடந்த பல தசாப்தங்களாக உழைத்தவர் பி விஜய ராகவன். டிவிஎஸ் ஸ்ரீசக்கரா என்கிற கம்பெனியை தொடங்குவதில் இருந்தே, அந்த கம்பெனியை வளர்த்து எடுக்க பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவராம்.
விஜய ராகவன், டிவிஎஸ் ஸ்ரீசக்கரா இயக்குநர் குழுவில் non-executive and non-independent Director ஆக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நேற்று 08 ஜூலை 2020 மாரடைப்பால் காலமானார் என்பது வருத்தமான செய்தி.
இவர் தன்னுடைய 21-ம் வயதில் இருந்து டிவிஎஸ் குழுமத்தில் வேலை பார்த்து வந்தவர். அதாவது கடந்து 50 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1969-ம் ஆண்டில் டிவிஎஸ் குழுமம் உருவாவதற்கு முன்பு, சுந்தரம் இண்டஸ்ட்ரீஸாக இருந்த போதே வேலையில் சேர்ந்துவிட்டார்.
இன்று டிவிஎஸ் குழுமம், இந்தியாவில் தவிர்க்க முடியாத முன்னனி ஆட்டோமொபைல் கம்பெனிகளில் ஒன்றாக தன்னை வளர்த்து எடுத்துக் கொண்டு இருக்கிறது.
"வாடிக்கையாளர் தான் ராஜா" என்கிற கொள்கையை தன் வாழ்நாளில் கடை பிடித்தவராம். இவரின் கொள்கையினாலேயே, 1980 மற்றும் 1990-களில் இருந்து பல வாடிக்கையாளர்கள் இன்னமும் டிவிஎஸ் ஸ்ரீசக்கரா கம்பெனியுடன் வியாபாரம் செய்து கொண்டு இருப்பதாக, டிவிஎஸ் குழுமத்தின் மற்றொரு மூத்த அதிகாரி சொல்லி இருக்கிறார்.