இந்தியாவின் 72வது குடியரசு தினவிழாவை இன்று உலகம் முழுக்க இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, பொதுவாழ்வு, கலை, சமூகசேவை, கல்வி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பலவேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை கொடுத்து அரசு கெளரவித்து வருகின்றது.
அதன்படி, வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான விருதினை பத்ம ஸ்ரீ விருதினை ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்புவுக்கு அறிவித்துள்ளது.
அதெல்லாம் சரி, யார் இந்த ஸ்ரீதர் வேம்பு. எதற்காக இவருக்கு இந்த விருது. வாருங்கள் பார்க்கலாம்.
உலக நிறுவனங்களுக்கு ஈடான ஜோஹோ
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜோஹோ (ZOHO) நிறுவனம், இன்று உலகம் முழுக்க தனது சேவைகளை செய்து வருகின்றது. மிக சிறிய அளவில் ஆரம்பித்த இந்த சேவையானது, இன்று உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சொல்லப்போனால் மைக்ரோசாப்ட், கூகுள், ஆரக்கிள் ,மற்றும் சேல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட பெருந்தலைகளுக்கு போட்டியாக வளர்ந்து வருகின்றது.
ஸ்ரீதரின் பின்னணி என்ன?
காவிரி கரையோரம் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் உமையாள்புரம் கிராமத்தில் பிறந்தவர் தான் ஸ்ரீதர் வேம்பு. அவரின் சொந்த ஊர் கொள்ளிடக் கரையோம் உள்ள திருப்பனந்தாள் அணைக்கரை பகுதி கிராமமான சிதம்பரநாதபுரம் கிராமமாகும். பிறந்தது கிராமப்புறம் என்றாலும் வளர்ந்தது சென்னை தான். சென்னை மேற்கு மாம்பலம் அஞ்சுகல் பள்ளியில் 9ம் வகுப்பு வரை பயின்றவர், 12ம் வகுப்பு வரை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா நேஷனல் பள்ளியில் பயின்றுள்ளார்.
கல்வித் தகுதி
இதன் பிறகு சென்னை ஐஐடியில் பொறியியல் முடித்து, அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக்கத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்துள்ளார். இதன் பிறகு இரண்டு ஆண்டுகள் குவால்காம் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இதன் பிறகு தான் 1996ல் அட்வெண்ட்னெட்.இன்க் (ஜோஹோவை ) நிறுவியுள்ளார். ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தினை ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் என்ற இருவர்களின் கூட்டணியால் அட்வெண்ட்னெட்.இன்க் எனும் மென்பொருள் நிறுவனத்தினை கலிப்போர்னியாவில் ஆரம்பித்துள்ளார்.
சென்னையில் ஜோஹோ கார்ப்
ஆனால் அதன்பிறகு அதன் பெயர் மாற்றப்பட்டு 2009ம் ஆண்டில் ஜோஹோ கார்ப் என்ற பெயரில், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது. இன்று இதன் அலுவலகம் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், சீனா மற்றும் இந்தியா என பல நாடுகளில், பல இடங்களிலும் விரிவடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஜோஹோ உலகம் முழுவதும் 60 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது.
முக்கிய வாடிக்கையாளர்கள்
ஜோஹோவின் வாடிக்கையாளர்களில் லெவிஸ், அமேசான், பிளிப்ஸ், வோர்ல்பூல், ஓலா, ஜியோமொ, சோமேட்டோ உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் அடங்குவர். இப்படி உலகம் முழுக்க வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜோஹோவின் அலுவலகம் மத்தளம்பாறை கிராமத்திலும் உள்ளது. இது போல பால கிராமங்களிலும் அமைக்க திட்மிட்டு வருவவதாகவும் பல பேட்டிகளில் ஸ்ரீதர் கூறியுள்ளார். இதுவரை ஐடி நகரங்களில் இருந்து தான் ஒரு ஆப்பினை உருவாக்க முடியும் என்று பலரும் நினைத்திருப்போம். ஆனால் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் இருந்தும், சர்வதேச அளவில் கோலேச்ச முடியும் என ஜோஹோ காட்டியுள்ளது.
ஜோஹோவின் முக்கிய பிராண்டுகள்
ஜோஹோ முக்கிய மூன்று பெரிய வர்த்தகப் பிராண்ட் பின்னால் உள்ளத. ஒன்று Zoho, அடுத்தது ManageEngine மற்றும் WebNMS ஆகியவை, கூட்டாக உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு SaaS (மென்பொருள் ஒரு சேவை) தயாரிப்புகளை வழங்குகின்றன. பல கடினமான சூழ்நிலைகளிலும் ஜோஹோவை சரியாக வழி நடத்திய பெருமை ஸ்ரீதருக்கே சாரும்.
நிதியுதவி
இத்தகைய பெரிய வளர்ச்சியை அடைந்தும், ஜோஹோ தனது நிறுவன விரிவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆரம்பம் முதல் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடு பெறவில்லை. அனைத்து விதமான நிதியுதவியும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பெறப்பட்டவை.
பிரச்சனைகளும் உண்டு
ஆரம்பத்தில் பற்பல பிரச்சனைகளை எதிர்கொண்ட ஸ்ரீதர், பல சோதனைகளையும் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றித் தான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். இன்று இந்த நிறுவனத்தின் வருவாய் டிசம்பர் நிலவரப்படி, 2.5 பில்லியன் டாலராகும். இன்றைய இதன் மதிப்பு சில மில்லியன்கள் ஆகும்.
ஜோஹோ பள்ளி பற்றி
ஆரம்பத்தில் ஐடி துறை சார்ந்த மாணவர்கள் கூகுள், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், மைக்ரோசாப்ட் என்ற பெரும் நிறுவனங்களில் பணிபுரிய ஆர்வம் காட்டிய நிலையில், ஜோஹோவுக்கு தேவையான பணியாளர்களை நாமே உருவாக்குவோம் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் ஜோஹோ பள்ளி. இங்கு கல்வியுடன் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ஜோஹோவிலேயே பணியும் வழங்கப்பட்டு வருகின்றது. இது தவிர இன்னும் பல சேவைகளையும் கிராமப்புற மாணவர்களுக்கு ஜோஹோ செய்து வருகின்றது.
வணிகம் பற்றி
ஸ்ரீதர் இதற்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், தொழில்நுட்பம் தான் ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் வலிமையை தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு ஸ்மார்ட்போன் சந்தையில் இன்று இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நம்மால் ஒரு சிப்பை கூட உருவாக்க முடியாது. நாம் மெட்ரோ ரயிலில் செல்கிறோம். ஆனால் அதற்கு தேவையான பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். ஆக நமக்கு தேவையானவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவிட்டு, நாம் அயல் நாடுகளுக்காக வேலை செய்கின்றோம். ஆக நாம் உற்பத்தியினை பெருக்க வேண்டும். தொழில்நுட்பங்கள் வளர வேண்டும் என்று கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.
ஒன் இந்தியா சார்பில் வாழ்த்துகள்
ஆக இப்படி ஒரு தமிழகத்தினை சேர்ந்த ஒருவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்ததில் நாமும் பெருமை கொள்ள வேண்டும். உண்மையில் கிராமப்புறங்களில் உற்பத்தியினை பெருக்கி, தொழில் நுட்பத்தினை கொண்டு வரவேண்டும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். ஏனெனில் இன்று சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஐடி நகரங்களில் பணிபுரியும் ஐடி ஊழியர்கள் பலரும் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. எது எப்படியோங்க.. ஜோஹோவுக்கும், ஸ்ரீதர் வேம்புக்கும் ஒன் இந்தியா சார்பில் நமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோமே.