இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் சேவை தளமாக விளங்கும் பேடிஎம், ஐபிஓ தோல்வியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டும் வரும் வேளையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் சேவையை பெரிய அளவில் மார்கெட்டிங் செய்யவும் திட்டமிட்டு வரும் நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் 3 உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
3 உயர் அதிகாரிகள்
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் பிரிவின் சிஓஓ அபிஷேக் அருண், ஆப்லைன் பேமெண்ட்ஸ் பிரிவின் சிஓஓ ரேனு சாட்டி, கடன் பிரிவின் துணை தலைவர் & சிஓஓ-வான அபிஷேக் குப்தா ஆகியோர் அடுத்தடுத்து நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க்
இதில் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் பிரிவின் சிஓஓ-வான அபிஷேக் அருண் கடந்த 5 வருடமாக பேடிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பேடிஎம் நிறுவனத்திற்கு முன்பு ஆர்பிஎல் வங்கியின் உயர் துணை தலைவராக இருந்தார். பேடிஎம் நிறுவனத்தை விட்டு விலகும் தகவலை அபிஷேக் அருண் தனது லிங்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஆப்லைன் பேமெண்ட்ஸ்
ரேனு சாட்டி பேடிஎம் நிறுவனத்தில் தான் தனது பணியை துவங்கினார் மனித வள பிரிவின் மேலாளர் ஆக பணியை துவங்கி கடந்த 15 வருடத்தில் ஆப்லைன் பேமெண்ட்ஸ் பிரிவின் சிஓஓ என்னும் முக்கியமான இடத்தை ரேனு சாட்டி எட்டியுள்ளார்.
ரேனு சாட்டி
ரேனு சாட்டி ராஜினாமா-வுக்கு பின்பு பேடிஎம் கடன் பிரிவின் சிஇஓ-வான பவேஷ் குப்தா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம் என்றும், நிர்வாகம் கட்டாயம் ரேனு சாட்டி-யை வெளியேற அனுமதிக்காது, இதற்கான பேச்சுவார்த்தையும் தற்போது துவங்கியுள்ளதாக பேடிஎம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடன் பிரிவு
கடன் பிரிவின் துணை தலைவர் & சிஓஓ-வான அபிஷேக் குப்தா பேடிஎம் நிறுவனத்தில் ஒருவருடத்திற்கு முன்பு தான் பணியில் சேர்ந்தார். தற்போது தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இந்த 3 உயர் அதிகாரிகளும் பேடிஎம் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக பிரிவுகளை சேர்ந்தவர்.
பேடிஎம் மால் அபிஷேக் ரஞ்சன்
சமீபத்தில் பேடிஎம் மால் நிறுவனத்தின் சிஓஓ-வான அபிஷேக் ரஞ்சன்-ஐ பேடிஎம் கைப்பற்றிய கடனுக்கான தவணையை வசூலிக்கும் கிரெடிட்மேட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேடிஎம் நிறுவனம்
பேடிஎம் நிறுவனத்தில் கடந்த 2 வருடத்தில் அதிகப்படியான உயர் அதிகாரிகள் வெளியேறி வருகின்றனர். பேடிஎம் பிரசிடெட் அமித் நாயர், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சிஇஓ ஷின்ஜினி குமார் இப்படி பலர் வெளியேறியுள்ளனர். ஆனால் ஐபிஓ வெளியீட்டுக்கு பின்பு உயர் அதிகாரிகள் வெளியேறுவது நிறுவனத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் பெரும் ஆபத்தாக இருக்கும்.