உலகம் முழுவதும் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகளின் அரசுகள் எப்படி டிஜிட்டல் தரவுகளைக் கையாளுவது, எப்படிப் பாதுகாக்க வேண்டும், தனிநபர் தரவு உரிமை என்ன..? ஒரு நிறுவனம் எந்தத் தரவுகளைக் கேட்கலாம், கேட்க கூடாது எனப் பல விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது.
ஆனால் இந்தப் பக்கம் ஒட்டுமொத்த ஆட்டமும் மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.
விஜய் சேகர் சர்மா
இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் சேவை நிறுவனமாக இருக்கும் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் சர்மா தனது டிவிட்டர் கணக்கில் முக்கியமான தரவுகளைப் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் ஆதிக்கமும், அமெரிக்காவின் சரிவும் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா
இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் டிஜிட்டல் தரவுகளை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் பார்த்து அதை அடிப்படையாக வைத்து விதிகளை உருவாக்கி வரும் வேளையில் குளோபல் மொபைல் டிராபிக்-ல் அமெரிக்காவை ஓரம் கட்டிவிட்டு இந்தியா, சீனா மாஸ் காட்டி வருகிறது.
அமெரிக்காவின் இண்டர்நெட் ஆதிக்கம்
பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ இன்று பகிர்ந்துள்ள டிவீட்டில் அமெரிக்காவின் இண்டர்நெட் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது எனத் தெரிவித்துள்ளார். இந்த டிவீட்டில் இத்துறை ஆய்வாளர் பெனடிக்ட் எவன்ஸ்-ன் டிவீட்டையும் ரீ-டிவீட் செய்துள்ளார்.
பெனடிக்ட் எவன்ஸ்
பெனடிக்ட் எவன்ஸ் தனது டிவீட்டில் 2012ல் மொபைல் டிராபிக் தரவுகளில் ஐரோப்பா, வட அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகியவை மட்டுமே 73 சதவீத சந்தை ஆதிக்கத்தைக் கொண்டு இருந்தது, ஆனால் 2022ல் இந்த நாடுகளின் மொபைல் டிராபிக் அளவு வெறும் 25 சதவீதமாக உள்ளது.
இந்தியா, சீனா
இதே காலகட்டத்தில் வெறும் 2 சதவீதமாக இந்தியாவின் பங்கு தற்போது 21 சதவீதமாகவும், சீனாவின் பங்கு 10 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என்ற தரவுகளைப் பகிர்ந்துள்ளார்.
50 சதவீத சந்தை
இதன் மூலம் ஒட்டுமொத்த மொபைல் டிராபிக் டேட்டாவில் சீனா, இந்தியா மட்டும் 50 சதவீத சந்தையைக் கொண்டு இருப்பதால் அமெரிக்காவின் ஆதிக்கம் இண்டர்நெட் உலகில் அழிந்து உள்ளதாக இத்தரவுகள் விளக்குகிறது.
டேட்டா கவர்னன்ஸ் பாலிசி
இந்த வருடம் ஜூன் மாதம், இந்தியா அரசு பொதுமக்கள் ஆலோசனைக்காக நேஷ்னல் டேட்டா கவர்னன்ஸ் ப்ரேம்வொர்க் பாலிசியை வெளியிட்டது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் இயக்கவியலாக இருக்கும் தரவு நிர்வாகத்திற்கான நவீன கட்டமைப்பை உருவாக்குவதே மத்திய அரசின் நோக்கம் பார்வை என்று தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
தரவு பாதுகாப்பு மசோதா
இதேபோல் இந்தியாவில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இதேபோல் மக்களின் தரவுகளும் பொதுத் தளத்தில் அதிகரித்துள்ளதால், இதைச் சரியான முறையில் கையாள வேண்டும் என்பதற்காக டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ன் வரைவை மறுதிருத்தம் செய்து நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5ஜி சேவை
இதற்கிடையில் தான் இந்தியாவில் 5ஜி சேவையும், பிஎஸ்என்எல் நாட்டின் அனைத்து கிராமத்திலும் 4ஜி சேவையைக் கொண்டு வர உள்ளது. இதனால் சர்வதேச மொபைல் டேட்டா பயன்பாட்டில் சீனாவை விரைவில் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் டேட்டா டிராஃபிக்
இந்தியாவில் மொத்த மொபைல் டேட்டா டிராஃபிக் 2022 இல் மாதத்திற்கு 18 எக்ஸாபைட்கள் (EB) இருந்து 2028 இல் மாதத்திற்கு 53 EB ஆக 19 சதவீத கூட்டு வருடாந்திர விகிதத்தில் வளரும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.