கொல்கத்தா, மேற்கு வங்கம்: இந்தியாவில், ஒவ்வொரு நபரும் சராசரியாக 2.5 கிலோ ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நுகர்ந்து பயன்படுத்துகிறோம் என மத்திய ஸ்டீல் துறையின் இணை அமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே சொல்லி இருக்கிறார். இது இந்திய வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்திய ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் மேம்பாட்டுச் சங்கத்தின் Indian Stainless Steel Development Association (ISSDA) 30-வது ஆண்டு விழாவில் இந்த தரவுகளைச் சொல்லி இருக்கிறார் இணை அமைச்சர்.
கடத 2010-ம் ஆண்டில் ஒரு இந்தியர், சராசரியாக 1.2 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீலை நுகர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அடுத்த 8 வருடங்களில், இந்தியர்களின் சராசரி ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் நுகர்வு 100 சதவிகிதம் அதிகரித்து, ஒரு நபருக்கு 2.5 கிலோ என அதிகரித்து இருக்கிறது.
மேலும் பேசிய அமைச்சர் "இந்தியாவில் ஸ்டெயின் லெஸ் ஸ்டீலுக்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் சுமாராக 6 - 7 சதவிகிதமாக அதிகரித்து வருகிறது. இது உலக அளவிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வளர்ச்சி" எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் மேம்பாட்டுச் சங்கத்தின் Indian Stainless Steel Development Association (ISSDA) தலைவர் கே கே பஹுஜாவும், உலகிலேயே ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தேவை, வேகமாக அதிகரித்து வரும் சந்தையாக இந்தியா இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சி, அந்த நாட்டின் ஸ்டெயின் லெஸ் ஸ்டீலின் பயன்பாட்டைப் பொருத்து இருக்கிறது என்றும் சொல்வார்கள்.
உலக அளவில் ஒரு நபர் அதிக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் நுகரும் நாடுகள் பட்டியலின் முதல் 15 இடங்களில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இன்றைய தேதியில், இந்தியாவில், ஸ்டெயின் லெஸ் ஸ்டீலுக்கான தேவை, கட்டுமானம், ஆட்டோமொபைல், ரயில்வே போக்குவரத்து, வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், பதப்படுத்தும் தொழிற்சாலை... என பல துறைகளில் இருந்தும், பல்வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
இப்படி இந்தியாவில் ஸ்டெயின் லெஸ் ஸ்டீலுக்கான சந்தை வளர்ந்து வரும் நேரத்தில் தான், அமெரிக்க சீன வர்த்தகப் போரால், நம் உள் நாட்டு ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் ஏற்றுமதி செய்ய முடியாத ஆசிய நாடுகள், இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் உள்ளூர் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதொடு இந்தியாவில் ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் உற்பத்தியாளர்கள் அதிகம் செலவழித்து தான், ஸ்டெயில் லெஸ் ஸ்டீல் கழிவுகள், ஃபெர்ரோ நிக்கல் போன்ற மூலப் பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறதாம். இதனாலும் உள் நாட்டு ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் உற்பத்தியாளர்களால், ஆசிய நாடுகளுடன் விலையில் போட்ட போட முடியவில்லையாம்.
ஆக இந்தியாவில் போதுமான சந்தை இருந்தும் வியாபாரம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் உள்ளூர் ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் வியாபாரிகள். எப்போது விடியுமோ தெரியவில்லை.