இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சரிவில் இருந்து மீண்டு வரவும், அதிகரித்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக முதலாவதாகத் தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையைக் குறைத்த நிலையில், இதைத் தொடர்ந்து மத்திய அரசும் பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையை அடுத்தடுத்துக் குறைத்தது.
தற்போது எந்த ஒரு அரசும் செய்திடாத வகையில் ஜார்கண்ட் மாநில அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு சுமார் 25 ரூபாய்க் குறைப்பதாக அறிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம்
ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வரான ஹேமந்த் சோரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரு சக்கர வாகன பயன்படுத்துவோருக்குச் சாதகமாக எரிபொருள் விலையைப் பெரிய அளவில் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
25 ரூபாய் குறைப்பு
ஜார்கண்ட் மாநில அரசு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை பயன்படுத்துவோரின் நலனுக்காகப் பெட்ரோல் லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார் இம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்.
பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடுத்தர மக்களின் வீட்டில் இரு சக்கர வாகனம் இருந்தாலும் பெட்ரோல் விலை உயர்வால் வாகனங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது, காரணம் பெட்ரோல் போடுவதற்கான பணம் அவர்களிடம் இல்லை என்பது தான்.
மக்கள் கவலை
குறிப்பாகப் பெட்ரோல் விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது என ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வரான ஹேமந்த் சோரன் தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
ரேஷன் கார்டு
மேலும் பெட்ரோல் மீதான 25 ரூபாய் விலை குறைப்பை நேரடியாக வழங்காமல் ஜார்கண்ட் மாநில முதல்வர் மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதாவது ரேஷன் கார்டை அடையாளமாகக் கொண்டு பெட்ரோல் போடும் போதும் ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் வீதம் மானிய தொகை ரேஷன் கார்டு இணைக்கப்பட்டு உள்ள வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
10 லிட்டர் பெட்ரோல்
மேலும் ஒரு குடும்பத்திற்கும் மாதம் 10 லிட்டர் பெட்ரோல்-ஐ மானிய விலையில் அளிக்கப்படும் என்றும் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். மேலும் இப்புதிய சலுகை வருகிற ஜனவரி 26ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்று இன்றுடன் 2 வருடம் முழுமையாக முடிகிறது.