இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில், பல கோடி மக்கள் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வரும் நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு தடுப்பு மருந்து பெறுவதற்கான வரைமுறையைப் பெரிய அளவில் மாற்றியுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது பரவி வரும் 2வது கொரோனா அலையில் இளம் தலைமுறையினர் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கோவிட் வேக்சின்-ஐ பெறலாம் என அறிவித்துள்ளது.
மோடி அரசின் இப்புதிய அறிவிப்பு மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள இதேவேளையில், மற்றொரு பிரச்சனையும் உருவாகியுள்ளது.
மே 1 அனைவருக்கும் வேக்சின்
மத்திய அரசு 18வயதிற்கு அதிகமானோர் அனைவருக்கும் மே 1 முதல் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பு மருந்து பெறத் தகுதி உடையவர்கள் எண்ணிக்கை 94 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் ஒரு மாதத்திற்கே வெறும் 8 கோடி பேருக்கான கோவிட் வேக்சின் மட்டுமே தயாரிக்கும் தளம் உள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை
இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் பல இடங்களில் வேக்சின் மருந்து முதல் ஆக்சிஜன் சிலிண்டர் வரையில் திருடப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். மே 1ஆம் தேதிக்குப் பின் இதேபோன்ற வேக்சின் மருத்துக்கும் அதிகளவிலான பற்றாக்குறை ஏற்படும். தற்போது டெல்லியில் 6 மருத்துவமனையில் ஆக்சிஜன் ஸ்டாக் இல்லை.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஓரே வழி இந்தியாவில் கோவிட் வேக்சின் தயாரிப்பை அதிகரிப்பதும், வெளிநாட்டில் இருந்து அதிகளவிலான தடுப்பு மருந்தை இறக்குமதி செய்வது தான். இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கச் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுமார் 4,500 கோடி ரூபாய்க்கு அதிகமாக நிதியுதவி அளித்துள்ளது.
வெளிநாட்டுக் கொரோனா தடுப்பு மருந்து
இந்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் மருந்தை இந்தியாவிற்குக் கொண்டு வர உள்ள நிலையில், விரைவில் பைசர், மாடெர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்தையும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.
பைசர் நிறுவனம்
இந்தச் சூழ்நிலையில் கோவிட் வேக்சின் தயாரிக்கும் பைசர் நிறுவனம் இந்தியாவின் தேவையை உணர்ந்து தானாக முன்வந்து லாபமற்ற விலையில் தடுப்பு மருந்தை அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு பைசர் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பைசர் வேக்சின் விலை
பைசர் நிறுவனம் அமெரிக்காவில் தனது கோவிட் வேக்சின் மருந்தை 19.5 டாலருக்கும், ஐரோப்பிய யூனியனில் 15.5 யூரோவுக்கும் விற்பனை செய்து வரும் நிலையில், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பைசர் கோவிட் வேக்சின் மருந்து விலை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து எவ்விதமான தகல்களையும் வெளியிடவில்லை.
வேக்சின் இறக்குமதி வரி
இந்தியாவில் தற்போது கோவிட் தடுப்பு மருந்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட உள்ள நிலையில் அரசு தரப்பில் எவ்விதமான கூடுதல் விலையும் இருக்காது. இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க விற்பனை விலையைப் பார்க்கும் போது இந்தியாவில் இதன் விலை 1,464.30 ரூபாய். இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.09 ரூபாய்.
பைசர் நிறுவனப் பங்குகள் சரிவு
இந்நிலையில் நேற்று வரையில் பைசர் நிறுவனப் பங்குகள் இந்தியப் பங்குச்சந்தையில் தொடர் வளர்ச்சியை அடைந்து வந்த நிலையில், பைசர் நிறுவனம் லாபமற்ற விலையில் கோவிட் வேக்சின்-ஐ இந்தியாவில் விற்பனை செய்யத் தயார் என அறிவித்த பின்பு தொடர் சரிவை எதிர்கொண்டது. இதனால் வர்த்தக முடிவில் 4.85 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.
முதலீட்டாளர்கள் கவலை
இந்தியாவின் சூழ்நிலையை உணர்ந்து பைசர் நிறுவனம் லாபமற்ற நோக்கில் கோவிட் வேக்சினை அளிக்க முன்வந்த நிலையிலும், முதலீட்டாளர்களுக்கு இந்திய வர்த்தகத்தின் மூலம் இந்நிறுவன லாபத்தில் பாதிப்பு ஏற்படுவது முக்கியப் பிரச்சனையாக விளங்குகிறது. இதன் வாயிலாக முதலீட்டாளர்களின் முதலீட்டில் அளவில் ஏற்பட்ட மாற்றத்தின் வாயிலாகப் பைசர் நிறுவன பங்குகள் சரிவடைந்துள்ளது.
சீரம் நிறுவனத்தின் புதிய விலை
இதேவேளையில் இந்தியாவின் கோவிட் வேக்சின் தயாரிப்பு நிறுவனமான சீரம் மத்திய அரசுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு மருந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மே 1 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் விலையை உயர்த்துள்ளது.
கோவிஷீல்டு-ன் புதிய விலை
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விலையின் மத்திய அரசுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.