சர்வதேச நாணய நிதியம் (IMF) சர்வதேச பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதாரக் கொள்கை வடிவமைப்பில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதுமட்டும் அல்லாமல் பல நாடுகளுக்குப் பொருளாதார வளர்ச்சி பணிகளுக்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையிலான கடன்களையும் வழங்கி வருகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நாணய நிதியம் உலகில் பொருளாதாரச் சரிவில் இருக்கும் நாடுகளுக்கு நிதியுதவி செய்யும் மிக முக்கியமான அமைப்பாக இருக்கும் காரணத்தால், இந்த அமைப்பின் உயர் அதிகாரிகள் அறிவிப்புகளும், முடிவுகளும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக உள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர்
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த இந்தியரான கீதா கோபிநாத் இப்பதவியில் இருந்து விலகிய நிலையில், பிரான்ஸ் நாட்டில் பிறந்த கலிபோர்னியா பல்கலைக்கழகம்-பெர்க்லி பொருளாதார நிபுணரான பியர் ஆலிவர் கூரிஞ்சஸ்-க்கு இப்பதவி கொடுக்கப்பட்டு உள்ளது.
பியர் ஆலிவர் கூரிஞ்சஸ்
பியர் ஆலிவர் கூரிஞ்சஸ்-ன் பணி வருகிற ஜனவரி 24 முதல் துவங்க உள்ளது, முதற்கட்டமாக இவரது நியமனம் பார்ட் டைம் ஊழியராக இருப்பார். இப்பணியில் இவருடை திறன் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்பு ஏப்ரல் 1, 2022 முதல் உறுதி செய்யப்படும்.
கீதா கோபிநாத்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகம் கொள்கை ஆகியவற்றைக் குறித்து பல முக்கியக் கருத்துக்களை அவ்வப்போது வெளியிடுவதன் மூலம் பலரின் கவனத்தைப் பெற்ற கீதா கோபிநாத்-தின் ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக் காலம் முடிந்த நிலையில், ஐஎம்எப்-ஐ விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்தார்.
ஐஎம்எப் அமைப்பு
இந்த அறிவிப்பு வெளியாகி அடுத்தச் சில நாட்களில் ஐஎம்எப் அமைப்புக் கீதா கோபிநாத்-ஐ முதல் துணை நிர்வாகத் தலைவராக நியமிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் இப்பதவியில் இருந்தவர் வெளியேற முடிவு செய்தது தான்.
முதல் துணை நிர்வாகத் தலைவர்
ஐஎம்எப் அமைப்பின் முதல் துணை நிர்வாகத் தலைவராக இருந்த ஜெஃப்ரி ஒகமோட்டோ வெளியேறும் காரணத்தால், கீதா கோபிநாத் இப்பதவியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இதனால் கீதா கோபிநாத் வகித்த தலைமை பொருளாதார ஆலோசகர் பதவி காலியனது. தற்போது இந்தப் பதவியில் தான் பியர் ஆலிவர் கூரிஞ்சஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
டாப் 2வது பதவி
முதல் துணை நிர்வாகத் தலைவர் என்பது ஐபிஎம் அமைப்பில் டாப் 2வது பதவி. சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரியான கிறிஸ்டலினா ஜார்ஜீவா-வுக்கு அடுத்தபடியாகவும், இவருக்குக் கீழ் இருக்கும் முதல் அதிகாரியாகவும் கீதா கோபிநாத் பணியாற்ற உள்ளார்.