ஆகாசா விமான நிறுவனம் கடந்த ஜூலை 7ஆம் தேதி தனது முதல் விமானத்தை மும்பையிலிருந்து அகமதாபாத் வரை இயக்கியது என்பது தெரிந்ததே.
தற்போது கூடுதலாக விமானங்களை இயக்கி வரும் ஆகாசா விமானம் தனது விமானிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சம்பளத்தை உயர்த்தி உள்ளது.
ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கிய ஆகாசா விமானம் ஒரே மாதத்தில் விமானிகளுக்கு சுமார் 60% வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகாசா விமான நிறுவனம்
ஆகாசா விமான நிறுவனம் விமானிகளுக்கு ஊதியத்தை சராசரியாக 60% உயர்த்தியுள்ளதாகவும், விமான கேப்டன்கள் மாதம் ரூ 4.5 லட்சம் எனவும், முதல் அதிகாரிகள் ரூ 1.8 லட்சம் எனவும் அக்டோபர் முதல் சம்பளம் பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் கேப்டன்கள் மற்றும் முதல் அதிகாரிகள் முறையே ரூ.2.79 லட்சம் மற்றும் ரூ.1.11 லட்சம் சம்பளம் பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக ரூ.8 லட்சம் சம்பளம்
அதேபோல் கேப்டன்கள் அதிகபட்சமாக மாதந்தோறும் 70 மணி நேரம் என்ற கட்டுப்பாடுடன் பணி புரிந்தால் ஒரு கேப்டன் ரூ. 8 லட்சத்தை சம்பாதிக்க முடியும் என்றும், இந்த தொகை தற்போது வாங்கும் ரூ.6.25 லட்சத்தை விட 28% அதிகம் என்றும் ஆகாசா ஏர் தெரிவித்துள்ளது.
கூடுதல் விமானங்கள்
ஆகாசா ஏர் விமான நிறுவனம் தற்போது 4 போயிங் 737 மேக்ஸைக் கொண்டுள்ள நிலையில் மார்ச் 2023க்குள் 18 கூடுதல் விமானங்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. எனவே விமானிகளுக்கு கூடுதல் சம்பளம் தருவது மட்டுமின்றி புதிய விமானிகளையும் பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
சம்பளம் உயர்த்தியது ஏன்?
டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் விரிவாக்கம் செய்யும் வகையில் அதிக விமானிகளை பணியமர்த்த தொடங்கியிருப்பதால், விமானிகளை ஈர்க்க ஊதியத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என ஆகாசா ஏர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள்
இந்திய விமான நிறுவனங்களை விட மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் அதிக பணியமர்த்தல் மற்றும் அதிக சம்பளம் தரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கத்தார் மற்றும் எமிரேட்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கும் ஊதியம், இந்திய விமான நிறுவனங்கள் விமானிகளுக்கு தரும் ஊதியம் அதிகம் என்பதால் விமானிகளை தக்க வைக்க கூடுதல் சம்பளம் தரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.