பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பப்படும் 2,000 ரூபாய் நிதியினை இன்று பிரதமர் மோடி விடுவித்துள்ளார்.
விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டமானது 2018ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதியானது விடுவிக்கப்படுகிறது. இது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
மாத மாதம் தவணை தொகை
விவசாயிகளுக்கு ஊக்கத்தினை அளிக்கும் வகையில் இந்த தொகையானது, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் என மூன்று தவணைகளில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அரசின் இந்த திட்டத்தின் மூலம் இதுவரையில் 1.38 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையானது செலுத்தப்பட்டுள்ளது.
விவசாய குடும்பங்களுக்கு பலன்
இந்த நிலையில் இன்று பிஎம் கிசான் திட்டம் மிகவும் பாதிக்கப்படக் கூடிய விவசாய குடும்பங்களுக்கு கூடுதல் வருமானத்தினை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அறுவடை காலத்திற்கு முன்பு விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுகிறது. இந்த நிலையில் இந்த முறை 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் இதன் பலனை பெற்றுள்ளன.
விவசாய துறையில் சவால்கள்
விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய நேரம் இது. மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, விவசாயம் என்பது புதிய சவால்களை கண்டு வருகின்றது. ஆக விவசாயத் துறையில் புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு பாராட்டு
கொரோனா நெருக்கடி காலத்திலும் கூட உற்பத்தியில் சாதனை படைத்த விவசாயிகளை பாராட்டியுள்ளார்.
மேலும் விவசாயிகள் படும் கஷ்டங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு உதவும் வகையில், விதைகள், உரங்கள் மற்றும் சந்தை அணுகலை எளிதில் கிடைக்கும் வகையில் உறுதி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். சந்தையில் டிஏபி-யில் விலை பல மடங்கு அதிகரித்தாலும், அதற்காக 12,000 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி அரசு விலையை கட்டுக்குள் வைத்ததாக கூறியுள்ளார்.
பருப்பு வகைகளுக்கு தட்டுப்பாடு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பருப்பு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது பருப்பு உற்பத்தியினை அதிகரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதன் விளைவாக கடந்த ஆறு ஆண்டிகளில் உற்பத்தியில் கிட்டதட்ட 50% அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி பிரதமர் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
கிடைத்து விட்டதா என எப்படி பார்ப்பது?
அதெல்லாம் சரி? இந்த பிஎம் கிசான் தொகை கிடைத்துள்ளதா என்பதை எப்படி பார்ப்பது?
நீங்களும் இந்த பிஎம் கிசான் திட்டத்தில் விண்ணப்பித்திருந்தால், பயனாளிகளின் பட்டியலில் உங்கள் பெயரைச் சரி பார்க்கலாம். ஆன்லைனிலும் பட்டியலில் உள்ள பெயரை சரி பார்க்கலாம்.
இதில் உங்கள் கணக்கில் பணம் வந்துள்ளதா இல்லையா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக நீங்கள் முதலில் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
இதற்குப் பிறகு வலது பக்கத்தில் உள்ள Farmers Corner மீது கிளிக் செய்யவும். அதில் Beneficiary Status ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இப்போது அது மற்றொரு ஒரு புதிய பக்கத்தில் தொடங்கும். அங்கு நீங்கள் உங்கள் ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
அதன் பிறகு உங்களுக்கு கிடைத்த நிதி ஸ்டேடஸ் குறித்த முழுமையான தகவல்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
எப்படி புதியதாக இணையலாம்?
இதுவரையில் இந்த திட்டத்தில் நீங்கள் இணையவில்லை. அல்லது சில காரணங்களால் உங்களால் இதுவரை உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை, உங்கள் விண்ணப்பம் இன்னும் நிலுவையில் இருந்தால், ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றலாம்.
தொடர்ந்து நீங்கள் இந்த திட்டத்தின் நன்மைகளைப் பெற விரும்பினால், https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தில், formers corner என்ற ஆப்சனில் new farmers registration என்ற ஆப்சனை கிளிக் செய்து பதிவு செய்யலாம்.