பாலிசிபஜார் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான ஆன்லைன் சந்தையில் பைசா பஜார், கொரோனா தாக்கத்தினால் 1,500 - 2,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பைசாபஜார் 3,000 - 4,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அதன் ஊழியர்களில் கிட்டதட்ட பாதிபேர் வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாலிசிபஜார் யூனிகார்ன் ஆதரவுடன் அதன் அணியில் மேலும் 6,000 பேரை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
வருவாய் வீழ்ச்சி
இதனை அறிந்த நபரின் கூற்றுப்படி, பைசா பஜாரின் வருவாய் கடந்த மார்ச் மாதத்திலிருந்து சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அடுத்த ஆண்டிற்கான கடன் வழங்கும் வியாபாரத்தில் பெரியளவில் மாற்றத்தினை காண மாட்டார்கள். ஆக பைசா பஜார் நிறுவனம் இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஸ்டார்டப்கள் அதிரடி முடிவு
இதே கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஸ்டார்டப் நிறுவனம் மட்டும் அல்ல, ஒயோ, ஸ்விக்கி, சோமேட்டோ, கியூர்ஃபிட் உள்ளிட்ட மிகப்பெரிய ஸ்டார்டப்கள் கூட தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் அதன் ஊழியர்களின் மொத்த விகிதத்தில் 10 -30 சதவீதம் பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு கடன்
கடந்த 2019ம் ஆண்டில் பைசா பஜார் நிறுவனம் 10,000 கோடி ரூபாய் கடன் வழங்கியிருந்ததாக தெரிவித்து இருந்தது. எனினும் தற்போதைய நெருக்கடி நிலையில் இந்த வருடமும் இதனைன் எட்டுமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது. இது கிரெடிட் கார்டு மற்றும் கடன்கள் மட்டும் அல்ல, மியூச்சுவல் ஃபண்டுகளிலும் இந்த நிறுவனத்தின் தளத்தின் மூலம் முதலீடு செய்ய அனுமதிக்கிறது.
பெரும் பின்னடைவு
இது கொரோனா வைரஸின் தாக்கத்தின் மத்தியில் பல பெரிய கார்ப்பரேட்டுகள் முதல் சிறிய அளவிலான எம்எஸ்எம்இ மற்றும் ஸ்டார்டப்கள் வரை, பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவினை சந்தித்துள்ளன. இதன் காரணமாக பல பெரிய நிறுவனங்களும் பணி நீக்கம் என்னும் அஸ்திரத்தினை கையில் எடுத்துள்ளன.
முதலீடை பெற முடியுமா?
இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் பெரும்பாலான ஸ்டார்டப் நிறுவனங்கள், அன்னிய முதலீடுகளின் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது உள்ள நெருக்கடியான நேரத்தில் முதலீடுகளை திரும்ப திரட்ட முடியுமா என்பதே சந்தேகமாகத் தான் உள்ளது. ஆக இவைகள் செலவினை குறைக்க பணி நீக்கம் செய்து வருகின்றன.
லாக்டவுன் தளர்வு
அதிலும் இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவினால் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் பாதிக்கபட போகிறார்களோ? பொருளாதாரம் என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை. இதனால் நிறுவனங்கள் மேலும் பின்னடவை சந்திக்கும் நிலைக்கே தள்ளப்படலாம். எனினும் இதில் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்னவெனில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்கள் தவிர, மற்ற இடங்களில் சற்று லாக்டவுனில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது சீர்குலைந்து போன நிறுவனங்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கலாம்.


Click it and Unblock the Notifications