தமிழகத்தில் புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் ஆவல் இருந்திருக்கும்.
பொன்னியின் செல்வன் நாவலை சிறு வயதினர்களோ அல்லது முதியவர்களோ படிக்காதவர்கள் இருக்க முடியாது என்பதுதான் உண்மை.
அத்தகைய பொன்னியின் செல்வன் நாவலை பல திரையுலக பிரபலங்கள் படமாக்க முயற்சித்த போதிலும் தற்போது மணிரத்னம் அவர்களால்தான் அது சாத்தியமாயமாகியுள்ளது. இந்த பொன்னியின் செல்வன் நாவலின் விற்பனை சாதனை மற்றும் திரைப்படத்தின் வர்த்தகம் குறித்து தற்போது பார்ப்போம்.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் நாவல் ஒவ்வொரு ஆண்டும் 1,00,000 பிரதிகள் விற்பனையுடன் தமிழில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் ஆகும். வேறு எந்த புத்தகமும் இந்த சாதனையை இன்னும் நெருங்கவில்லை.
கல்கி
பொன்னியின் செல்வன் நாவல் 'கல்கி' என்ற புனைப்பெயரான ஆர் கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்டு ஏறக்குறைய 72 ஆண்டுகளுக்கு பிறகும் தமிழ்ப் பதிப்பகத் துறையை தனி ஒருவனாக காப்பாற்றி கொண்டு இருக்கின்றது.
தமிழில் அதிகம் விற்பனையாகும் புத்தகம்
பொன்னியின் செல்வன் இதுவரை 1,00,000 பிரதிகள் ஒவ்வொரு வருடமும் விற்பனையாகி தமிழில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் என்ற சாதனையை பெற்றுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 'விங்ஸ் ஆஃப் ஃபயர்' என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான 'அக்னி சிறகுகள்' புத்தகம் முதல் ஆண்டில் 1,50,000 பிரதிகள் விற்று 'பொன்னியின் செல்வன்' சாதனையை பின்னுக்கு தள்ளினாலும், இரண்டாவது ஆண்டில் சுமார் 1,00,000 பிரதிகள் விற்றது என்பதும், அதன்பின்னர் விற்பனை குறைந்தது என்பதும் மீண்டும் பொன்னியின் செல்வன் முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் அதிகரிக்கும்
பொன்னியின் செல்வன் ஒவ்வொரு வருடமும் 1,00,000 பிரதிகள் விற்பனையாகி வரும் நிலையில் 'பொன்னியின் செல்வன்' படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தால், விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாவதால் இந்த நாவலை மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கும் வாய்ப்பும் உள்ளது என்றும் தமிழ் பதிப்பகமான நியூ ஹொரைசன் மீடியாவின் நிறுவனர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாவலின் விலை
ஐந்து தொகுதிகள் கொண்ட பொன்னியின் செல்வன் தொகுப்பின் விலை ரூ.1,300, நியூ ஹொரைசன் நாவலின் பதிப்பு ஆண்டுதோறும் சுமார் 4,000 பிரதிகள் விற்பனையாகிறது.
அமேசானில் சாதனை
பொன்னியின் செல்வன் டீஸர் வெளியாகிய சில நாட்களுக்குப் பிறகு, அமேசானின் இந்தியா இணையதளத்தில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்த தமிழ்ப் புத்தகம் என்ற அரிய சாதனையை 'பொன்னியின் செல்வன் படைத்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த இலக்கிய முகவர் மற்றும் வெளியீட்டுத் துறை வர்ணனையாளர் கனிஷ்க குப்தா அவர்கள் கூறியபோது, அமேசான் இந்தியாவில் நம்பர் 1 தரவரிசைப் புத்தகம் கூட வாரத்திற்கு 6000-7000 பிரதிகள் மட்டுமே விற்பனையான நிலையில் பொன்னியின் செல்வன் அதைவிட அதிகமாக விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆடியோ பதிப்பு
பெங்களூரைச் சேர்ந்த டிஜிட்டல் பதிப்பகமான புஸ்டகா டிஜிட்டல் மீடியாவின் இயக்குனர் ராஜேஷ் தேவதாஸ் அவர்கள் கூறியபோது, 'கடந்த வாரம் பொன்னியின் செல்வனின் ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் தொகுதியின் ஆடியோ பதிப்பை வெளியிட்டுள்ளோம். அடுத்த சில மாதங்களில் மீதமுள்ள தொகுதிகளின் பதிப்பையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
1950ஆம் ஆண்டு
தேசியவாத எழுத்தாளரும், பத்திரிகையாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான கல்கியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன், 1950 ஆம் ஆண்டு கல்கி இதழில் முதல்முறையாக தொடராக வெளிவந்தது. ஐந்து தொகுதிகள் மற்றும் ஏறக்குறைய 2,200 பக்கங்கள் கொண்ட பொன்னியின் செல்வன், சோழப் பேரரசின் வரலாற்றுப் புனைக்கதையாகும்.
காவேரி நதி
மற்ற பண்டைய இந்திய இதிகாச புத்தகங்களை போலவே, பொன்னியின் செல்வனின் பாத்திரங்களின் உருவாக்கம் மகத்தானது. காவேரி நதியே இந்த புத்தகத்தில் ஒரு கதாபாத்திரமாக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் வரலாறு
காதல், லட்சியம், அரசுரிமை, வீரம், துரோகம், நட்பு மற்றும் பக்தி ஆகியவற்றை உள்ளடக்கிய கதைக்களமே இந்த நாவலின் நீடித்த புகழுக்குக் காரணம். தமிழ்நாட்டின் வரலாற்றை ஆழமாகத் தோண்டுவதற்கு மக்களை இந்த நாவல் தூண்டியது. புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கிய இடங்களுக்கு வருடாந்திர யாத்திரை மேற்கொள்ளும் பல குழுக்கள் உள்ளன என சேஷாத்ரி கூறுகிறார்.
எம்ஜிஆர்-கமல்ஹாசன்
1958ல் எம்.ஜி.ராமச்சந்திரனும், 1990களின் முற்பகுதியில் கமல்ஹாசனும் இந்த நாவலை திரைப்படமாக்க முயற்சித்தனர். ஆனால் இரண்டு திட்டங்களும் ஒருசில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டன. பொன்னியின் செல்வனின் காவியத்திற்கு தேவையான முதலீடு, அந்த காலத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு இருந்த சிறிய அளவிலான திரைப்பட சந்தை காரணமாக திரைப்படம் சாத்தியமாகவில்லை. ஆனால் தற்போது தமிழ் திரைப்படங்கள் உலக அளவில் பல கோடிகளை வசூல் செய்வதால் லைகா-மணிரத்னம் கூட்டணியால் சாத்தியமாகியுள்ளது.
ரூ.500 கோடி பட்ஜெட்
இந்த நிலையில் தற்போது 'பொன்னியின் செல்வன்' திரைப்படமாகியுள்ளது. கடந்த 8ஆம் தேதி பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் டீஸர் வெளியானது. மணிரத்னம் இந்த நாவலை இரண்டு பாகங்களாக பிரித்து, மல்டி ஸ்டார் நடிகர்களுடன் ஐந்து மொழிகளில் உருவாக்கியுள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய படங்களில் ஒன்று பொன்னியின் செல்வன். இந்த படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வர்த்தமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசியமயமாக்கம்
எழுத்தாளர் கல்கியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, 1998 ஆம் ஆண்டு மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட அவரது படைப்புகளை "தேசியமயமாக்கியது". கல்கியின் படைப்புகளை அரசு கையகப்படுத்தியதால், அது பதிப்புரிமைக்கு உட்பட்டது அல்ல, எந்த வெளியீட்டாளரும் அதை மீண்டும் உருவாக்க முடியும். இதன் விளைவாக, கிட்டத்தட்ட 30 வெளியீட்டாளர்கள் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வெளியிட்டனர்.