டெல்லி : ஏற்கனவே கடுமையான பொருளாதார மந்த நிலையை சந்தித்து வரும் இந்தியா, பல துறைகள் தொடர் வீழ்ச்சி, குறைவான பணப்புழக்கம், ஏற்றுமதி சரிவு, வாராக்கடன் அளவு அதிகரிப்பு என பல பிரச்சனைகளால் துவண்டு போயுள்ளது.
தற்போது இது எல்லாவற்றையும் விட வங்கிகள் கடன் வாங்கி விட்டு, அதுவும் மோசடி செய்து கடன் வாங்கிவிட்டு, கட்டாதோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. இந்த கூட்டம் தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்தில் இதுபோன்ற பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மோசடியினால் வங்கிகளுக்கு இழப்பு
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும், 95,760 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஒரு புறம் அரசு வங்கிகளின் இழப்பை சரிசெய்ய போராடி வருகிறது. ஆனால் தொடர்ந்து இது போன்ற வன்மையான சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதனால் வங்கிகளுக்கு நாளுக்கு நாள் நஷ்டமே அதிகரித்து வருகிறது.
மோசடி வழக்குகள்
இந்த நிலையில் ஸ்டேட் வங்கிகள் இந்த இடைப்பட்ட ஆறு மாதங்களில் மட்டும் 5,743 மோடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலான மோசடி வழக்குகள் கடந்த பல ஆண்டுகளில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பாக 1000 வழக்குகள், 2,500 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
எனினும் இது போன்ற மோசடிகளை தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். இதில் வேடிக்கை என்னவெனில் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் செயல்படாத நிறுவனங்களின் 3,38,000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் அவர்களின் சொத்துகள் முடக்கம், வெளியேறியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் இயற்றுவது என பல இதில் அடங்கும்.
எந்த வங்கியில் எவ்வளவு மோசடி
குறிப்பாக மோசடி செய்யப்பட்ட தொகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 25,400 கோடி ரூபாயும், இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10,800 கோடி ரூபாயும், இதே பேங்க் ஆப் பரோடா 8,300 கோடி ரூபாயும் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வங்கியாளர்கள் தளர்வான விதிமுறைகளை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில வங்கியாளர்கள் மோசடியாளர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பணத்தை மீட்க திவால் சட்டம் கைகொடுத்துள்ளது
எனினும் இதில் ஒரே ஒரு சாதகமான விஷயம் என்னவெனில் கடந்த 2016ல் பிரதமர் நரேந்திரமோடி நடைமுறைக்கு கொண்டு வந்த திவால் நிலை சட்டத்தால், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளின் மூலம் 140 பில்லியன் டாலரை மீட்க உதவியதாகவும் கூறியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த ஆண்டு மோசடி மூலம் 2 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை இழப்பாக அறிவித்தது.