மோடி அரசு அறிவித்துள்ள 2020 விவசாய மசோதாவிற்கு எதிராகப் பஞ்சாப் மாநில விவசாயிகள் அம்மாநிலத்தில் சுமார் 32 இடங்களில் ரயில் தண்டவாளம் மீது அமர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.
இதனால் பஞ்சாம் மாநில வழித்தடத்தைத் தொடர்புடைய அனைத்து ரயில்களுக்கும் அவ்வழியில் செல்ல முடியாத காரணத்தால் இந்திய ரயில்வே துறைக்குச் சுமார் 1,200 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இன்றைய நாள் வரையில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சுமார் 2,225 சரக்கு ரயில்கள் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தின் மூலம் இவ்வழித்தடத்தில் இயக்க முடியாமல் தடைபெற்றுள்ளது. இதோடு 1,350 ரயில்கள் ரத்து செய்யப்பட்டோ அல்லது மாற்று வழியில் அனுப்பப்பட்டு உள்ளது என ரயில்வே துறை தரவுகளை வெளியிட்டுள்ளது.
நஷ்டம்
விவசாயிகளின் போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட ரயில்வே வர்த்தகப் போக்குவரத்துப் பாதிப்பின் எதிரொலியாகச் சுமார் 1,200 கோடி ரூபாய் வரையிலான நஷ்டம் வரும் என இந்திய ரயில்வே துறை கணித்துள்ளது.
Jandiala, Nabha, Talwandi Sabo மற்றும் Bathinda ஆகிய பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் மக்களின் பாதுகாப்பு கருத்து அனைத்து விதமான ரயில் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துப் பாதிப்பு
இந்த வழித்தடத்தில் விவசாயிகள் போராட்டம் நடக்கும் காரணமாக விவசாயம், தொழிற்துறை, மற்றும் கட்டுமான துறை சார்ந்த பொருட்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
பியூஷ் கோயல்
இந்நிலையில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாம் மாநில முதல்வர் அமிரிந்தர் சிங்-க்கு ரயில் பாதைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உத்தரவாதமும், ரயில் சேவையை ரயில்வே அதிகாரிகள் தொடரவும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
செப்டம்பர் 24 முதல்
பஞ்சாப் விவசாயிகள் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி முதல் மத்திய அரசு அறிவித்துள்ள 3 புதிய விவசாயத் துறை மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய விவசாயத் துறை மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை விலை உரிமையைப் பறிப்பது மட்டும் அல்லாமல் கார்பரேட் நிறுவனங்கள் கையில் விவசாயிகளைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் பஞ்சாப் விவசாயிகள்.
3 விவசாயச் சட்டங்கள்
1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயச் சேவைகள் சட்டம் 2020.