பாமர மக்களைக் கூட, டீமானிட்டைசேஷன் மற்றும் ஜிஎஸ்டி போன்றவைகளைக் கொண்டு வந்து பொருளாதாரம் பேச வைத்த பெருமை பாரதிய ஜனதா கட்சி அரசையே சேரும்.
மக்கள் பொருளாதார செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டதால், தற்போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சியைக் குறித்தும் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
மக்கள் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி பேசத் தொடங்கிய நேரமோ என்னமோ, இதிய பொருளாதாரம் ரிவர்ஸ் கியர் போட்டு பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஆதாரம் கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.5 சதவிகிதம் மட்டும் வளர்ந்து இருப்பது. இவ்வளவு மோசமான வளர்ச்சியில் இருந்து மீள என்ன செய்யலாம் என ரகுராம் ராஜன் தன் யோசனைகளைச் சொல்லி இருக்கிறார்.
நில சீர் திருத்தம்
1. நிலம் சார்ந்த கணக்குகளையும், நிலம் யாருக்குச் சொந்தம் போன்ற பதிவுகளையும் விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக ஏழ்மையான மாநிலங்களில் இந்த வேலைகளை விரைந்து முடிக்கச் சொல்கிறார்.
2. நிலப் பதிவு (Land Registration), நில பிராந்தியங்களைப் பிரிப்பது (Land Zoning), நிலப் பிராந்தியங்களை மாற்றுவது (Alter Land zone) போன்ற நடவடிக்கைகளுக்கு வெளிப்படையான செயல்முறைகள் தேவை.
3. நிலத்தை கையகப்படுத்துவதை (Land Acquisition) மிக மிக அரிதாக மாற்ற வேண்டும்.
4. நிலத்தை கையகப்படுத்தும் நடைமுறைகளையும் எளிதாக்க வேண்டும் நச் சொல்லி இருக்கிறார்.
தொழிலாளர்
1. தொழிலாளர் சார்ந்த ஒப்பந்தங்களை தளர்வுபடுத்த வேண்டும்.
2.Intermeidate contract-க்களைச் செயல்படுத்த, சட்டங்களைக் கொண்டு வர சொல்கிறார். இந்த intermeidate contract வந்தால், ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்கிற அவசியம் ஏற்படாது. ஆனால் பணி அனுபவத்துக்கு தகுந்தாற் போல தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெறுவார்கள் எனச் சொல்லி இருக்கிறார்.
அதிகாரப் பகிர்வு
1. ஒவ்வொரு அமைச்சகத்தையும் தன் அதிகாரத்துடன் செயல்பட விட வேண்டும்
2. மாநில அரசுகளையும் பங்கு பெறச் செய்ய வேண்டும்.
3. 15-வது நிதி ஆணையத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை (Terms of Reference) அமல்படுத்த வேண்டும்.
4. மாநில அரசின் வரி வருவாய்களைத் தடுக்காதீர்கள் எனச் சொல்லி இருக்கிறார்.
முதலீடுகள்
1. வரி மற்றும் நெறிமுறைகளை (Regulatory) நிலைப்படுத்த வேண்டும். அதோடு அவைகளை எளிதில் கணிக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.
2. அரசு கொண்டு வர நினைக்கும் மாற்றங்களை பொது வெளியில் விவாதிக்க வேண்டும்.
3. மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், அந்த மாற்றங்களை தொழில் துறையினர் பின்பற்ற போதுமான கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும்.
Disinvestment - சொத்துக்களை விற்பது
1. Disinvestment என்பது வெறுமன நிதி திரட்டுவதற்கு அல்ல. ஆக பொதுத் துறை நிறுவனங்களை விரைவாக விற்க வேண்டாம்.
2. குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்களை முன்னணி பிசினஸ் குடும்பங்களுக்கு விற்க்க வேண்டாம். இந்த விற்பனை தவிர்ப்பால், ஒரே குடும்பத்திடம் அதிகாரம் குவிவதை தடுக்கலாம் என தன் அறிவுரைகளைக் கொடுத்து இருக்கிறார்.
இந்த அறிவுரைகளை மத்திய அரசு ஏற்குமா..?