டெல்லி: இந்தியாவில் கொரோனா மட்டுமின்றி, வரவிருக்கும் பொருளாதார பேரழிவையும் இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார பேரழிவைக் எதிர்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இன்னும் அப்பட்டமாக சொல்லப்போனால் இது சுனாமியைப் போல பேரழிவை ஏற்படுத்தலாம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு கொண்டிருக்கிறது
இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, நாட்டில் இதுவரை 126 பேர் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ளனர். மேலும் மூன்று பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அதனை மீட்க எந்த விதமான மீட்பு நடவடிக்கையினையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
பொருளாதாரம் அழிக்கப்படபோகிறது
சொல்லப்போனால் இந்திய பொருளாதாரம் அழிக்கப்படப்போகிறது. இதனால் நாடு அனுபவிக்க போகும் வேதனையான விஷயம் பற்றி உங்களுக்கு தெரியாது. இது ஒரு சுனாமியை போன்றது என்றும் செய்தியாளர்களிடம் பேசும் போது ராகுல் காந்தி கூறியுள்ளார். 2004ம் ஆண்டில் இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள ஒட்டுமொத்த சமூகங்களையும் ஒரு பேரழிவுகரமான சுனாமி தாக்கியது. அந்த நேரத்தில் அந்தமான் நிகோபர் தீவுகளில் என்ன நடந்தது என்பதையும் விவரித்தார்.
தெளிவு இல்லை
நான் தண்ணீர் வரப்போகிறது என்று அரசினை எச்சரித்து வருகிறேன். ஆனால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெளிவாக இல்லை. கோவிட் -19 மட்டும் அல்ல, வரப்போகும் பொருளாதார அழிவுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் நான் அதை மீண்டும் சொல்கிறேன். அடுத்த ஆறு மாதங்களில் மக்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையை அனுபவிக்க போகிறார்கள், அதற்காக நான் வருந்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.
கோடிக் கணக்கில் இழப்பு
கடந்த வெள்ளிக்கிழமையன்று அவரது ட்விட்டர் பக்கத்தில், சந்தை தொடங்கிய 15 நிமிடத்தில் முதலீட்டாளர்கள் கோடி கணக்கான ரூபாயினை இழந்துள்ளனர். நாம் மீண்டும் சொல்கிறேன் கொரோனா வைரஸ் ஒரு பெரும் பிரச்சனை. பிரச்சனையை புறக்கணிப்பது ஒரு தீர்வு அல்ல என்றும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.