ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு எனலாம். ஏனெனில் பங்கு சந்தையில் நுழையும் நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளே பொது பங்கு வெளியீடு எனப்படுகிறது. ஆரம்பத்தில் பங்கு சந்தைக்குள் நுழையும்போது முதலீட்டாளர்களை கவர, நல்ல நிறுவனங்கள் கூட குறைந்த விலையில் வெளியிடுவார்கள்.
ஆக மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளை ஆரம்ப காலத்திலேயே வாங்குவது நல்ல விஷயம். ஒன்று குறைந்த விலையில் கிடைக்கும், மற்றொன்று அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் என்றால் நிச்சயம் போட்டிகள் குறைவு. இப்படி முதலீட்டாளர்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக உள்ள நிலையில், அதில் முதலீடு செய்வது சிறப்பானதொரு விஷயம் தானே.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் பங்கு வெளியீட்டினை பற்றித் தான்.
நாளை IPO
பங்கு வெளியீடு என்றால் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படும் நிலையில், அதிலும் பொதுத்துறை நிறுவனத்தின் ஐபிஓ நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான். ரயில்டெல் நிறுவனம் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் நாளை (பிப்ரவரி 16) தனது பொதுபங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
முதலீட்டுக்கு எவ்வளவு தேவை?
பிப்ரவரி 16 அன்று தொடங்கும் இந்த பங்கு விற்பனையானது, பிப்ரவரி 18 அன்றும் முடிவடையும். இந்த ஐபிஓ-வில் மினிமம் லாட் சைஸ் என்பது 155 பங்குகளாகும். இந்த பங்கு வெளியீட்டில் ஒரு தனி நபர் 13 லாட்டுகள் வரையில் வாங்கிக் கொள்ளலாம். அதாவது 2015 பங்குகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த பங்கு வெளியீட்டின் விலையானது அதிகபட்சம் 94 ரூபாய் என்ற விலையில் இருக்கும். இதனால் ஒரு நபர் 14,570 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.
வெளியீடு என்று
இந்த பங்கு வெளியீடு ஒதுக்கீடு பிப்ரவரி 23 அன்று இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பிப்ரவரி 26 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம். இந்த பங்கினை ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஐடிபிஐ கேப்பிட்டல், எஸ்பிஐ கேப்பிட்டல் மார்கெட் உள்ளிட்ட வங்கிகள் வணக வங்கியாளர்களாக இருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பங்கு விற்பனை?
ரயில்டெல் நிறுவனம் இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 819.24 கோடி ரூபாய் நிதியினை திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக 87.15 மில்லியன் பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்ய, இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இந்த வெளியீட்டில் பாதி தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீதம் நிறுவனமல்லாத ஏலதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கேபின் டெக்னாலஜிஸ் (KFin Technologies) இந்த பங்கு வெளியீட்டின் பதிவாளராகும். மேலும் இந்த பங்கு வெளீயீடு மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றையும் இந்த நிறுவனம் நிர்வகிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு நல்ல வாய்ப்பு
இந்த பங்கின் முகமதிப்பு 10 ரூபாயாகும். ரயில்டெல் நிறுவனம் ஒரு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வழங்குனராகும். இது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வழங்குனர்களில் ஒருவராகும் என்று கிரிசில் தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் ஊழியர்களுக்காக 5 லட்சம் பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.