விமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு லக்கேஜ் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கும் நிலையில் அதேபோன்ற ஒரு கட்டுப்பாடு ரயில் பயணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
ரயிலில் அதிக லக்கேஜ்களை எடுத்து சென்றால் கூடுதல் கட்டணம் மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
எனவே இனிமேல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இஷ்டத்திற்கு லக்கேஜ்களை உடன் எடுத்துச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
லக்கேஜ்
கடந்த பல ஆண்டுகளாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இஷ்டத்திற்கு ஏராளமான லக்கேஜ்களை எடுத்து செல்வார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பயணிகள் லக்கேஜ் கொண்டு செல்வதற்கு புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே துறை
விமான பயணத்தை போலவே ரயில் பயணிகளும் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்து செல்வதற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகம் மே 29ஆம் தேதியன்று இதுகுறித்து தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ரயில் பயணத்தின் போது அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அதிகமான லக்கேஜ் இருந்தால் பயணத்தின்போது அசௌகரியம் அதிகமாக ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பார்சல்
ஒருவேளை அதிக லக்கேஜ் எடுத்து செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டால் பார்சல் அலுவலகத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
எவ்வளவு எடை?
இந்த நிலையில் ரயில்வே துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் அதிகப்படியாக 40 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை எடுத்து செல்லலாம் என்றும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் 35 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம் என்றும் அதற்கு மேல் கூடுதலாக லக்கேஜ்களை எடுத்து சென்றால் அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளது.
6 மடங்கு அபராதம்
அதிகப்படியான லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு பார்சல் சர்வீஸ் கட்டணத்தைவிட 6 மடங்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. உதாரணமாக 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்திற்கு 40 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை பார்சல் சர்வீஸில் புக் செய்தால் ரூபாய் 109 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால் அதே எடையுள்ள லக்கேஜ்களை விதிகளை மீறி ரயிலில் எடுத்து சென்றால் 109 x 6 = 654 என ஆறு மடங்கு அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
சூட்கேஸ் அளவு
அதேபோல் தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்லப்படும் சூட்கேஸ்கள் மற்றும் பெட்டிகளின் அளவுக்கும் ரயில்வேத்துறை கட்டுப்பாடு வைத்துள்ளது. அதிகபட்சம் 100 செமீ x 60 செமீ x 25 செமீ அளவில் தான் சூட்கேஸ் இருக்க வேண்டும் என்றும், ஆனால் ஏசி கோச்சில் பயணம் செய்யும் பயணிகளின் சூட்கேஸ், பெட்டியின் அதிகபட்ச அளவு 55 செமீ x 45 செமீ x 22.5 செமீ என இருக்கலாம் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.